இந்தியாவின் வருங்கால மருத்துவர்கள் தற்கொலை செய்வது வருத்தமளிக்கிறது – டி.ஆர்.பாலு

இந்தியாவின் வருங்கால மருத்துவர்கள் தற்கொலை செய்வது வருத்தமளிக்கிறது என்று  மக்களவையில் டி.ஆர்.பாலு பேசியுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக  தள்ளிவைக்கப்பட்டது.இதனிடையே மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் அக்டோபர் 1-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இன்று காலை 9 மணிக்கு தொடங்கப்பட்ட மழைக்கால கூட்டத்தொடரில் ஆளும் கட்சி, எதிர் கட்சி தலைவர்கள் மற்றும் எம்.பிக்கள் என அனைவரும் முகக்கவசம் அணிந்துகொண்டு பங்கேற்றனர்.

 இந்நிலையில் தான் நீட் தேர்வுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில்   தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீட் தேர்வுக்கு  எதிரான வாசகத்துடன், மாஸ்க்கை அணிந்து ஆர்ப்பாட்டம்  மேற்கொண்டனர்.இதன் பின்னர் மக்களவையில் திமுக எம்.பி., டி.ஆர்.பாலு பேசுகையில்,நீட் தேர்வின் காரணமாக தமிழ்நாட்டை சேர்ந்த கிராமப்புற மாணவர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.நீட் பாடத்திட்டத்தின் காரணமாகவே தமிழக மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் .இந்தியாவின் எதிர்கால மருத்துவர்கள் தொடர்ச்சியாக தற்கொலை செய்து வருகின்றனர்.சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் நீட் கேள்வி கேட்பதால் மாநில பாடத்திட்ட மாணவர்கள் சிரமப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.