மாத சம்பளம் வாங்குபவர்கள் கொரோனா தொற்றால் இறந்தால் 7 லட்சம் வரை இழப்பீடு!எவ்வாறு பெறுவது???

தனியார் நிறுவனங்களில் மாத சம்பளத்திற்கு பணிபுரிபவர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்தால்,இறந்தவரின் குடும்பத்துக்கு தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு (EPFO) அதிகபட்சமாக ரூ.7 லட்சம் வரை இழப்பீடு தருகிறது. 

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.இந்த நிலையில், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு (EPFO) ரூ.7 லட்சம் வரை நிவாரணம் தருகிறது.

PF கணக்கு :

இந்த நிவாரணத்தை பெற வேண்டுமெனில்,தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் கண்டிப்பாக PF கணக்கு வைத்திருக்க வேண்டும்.

வழங்கப்படும் இழப்பீடு:

அவ்வாறு,PF கணக்கு வைத்திருப்பவர் தான் பணிபுரியும் காலத்தில் உயிரிழந்தால்,இறந்தவரின் குடும்பத்துக்கு தொழிலாளர் வைப்புசார் காப்பீடு திட்டத்தின் (இடிஎல்ஐ) கீழ் இழப்பீடு வழங்கப்படுகிறது.இதற்கு முன்னதாக ரூ.6 லட்சமாக இருந்த இழப்பீடு தொகை, தற்போது ரூ.7 லட்சமாக  கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதியிலிருந்து உயர்த்தப்பட்டுள்ளது.

எதன் அடிப்படையில் இழப்பீடு:

ஏனெனில்,பொதுவாக தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் காப்பீட்டுக்காக (இடிஎல்ஐ) ஒவ்வொரு ஊழியரின் சம்பளத்திலிருந்து 0.50 சதவீத தொகையை எடுத்து இடிஎல்ஐ கணக்கில் மாதந்தோறும் செலுத்தி வருகின்றன.இதனால்,கொரோனா வைரஸ் தொற்று மட்டுமல்லாமல் வேறு எந்த காரணத்தால் பணியாளர் உயிரிழந்தாலும் இந்த இழப்பீட்டு தொகை வழங்கப்படும்.

தேவையான ஆவணங்கள்:

இந்த இழப்பீட்டு தொகையை பெற,உயிரிழந்தவரின் இறப்பு சான்று,வாரிசு சான்று மற்றும் பணிபுரிந்த நிறுவனத்தின் சார்பாக கையெழுத்து பெற்று விண்ணப்பம் ஆகியவை மிக அவசியம்.

இழப்பீடு பெறும் கால அவகாசம்:

அதிகபட்சமாக,ஒரு வாரத்துக்குள் இந்த இழப்பீட்டுத் தொகை கிடைக்க தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது.மேலும்,விண்ணப்பதாரர்கள் அளிக்கும் வங்கிக் கணக்கில் நேரடியாக இழப்பீடு தொகை ஒரு வாரத்தில் செலுத்தப்படுகிறது.

மாத சம்பளத்திற்கேற்ப இழப்பீடு:

இருப்பினும்,உயிரிழந்தவரின் மாத சம்பளம் ரூ.15 ஆயிரத்துக்குக்கீழ் இருந்தால் அதற்கேற்ப இறந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு தரப்படுகிறது. குறைந்தபட்சமாக ரூ.2.50 லட்சமும்,அதிபட்ச தொகையாக ரூ.7 லட்சம் வரை இழப்பீடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.எனினும்,தொழிலாளர் வைப்புசார் காப்பீடு திட்டத்தின் (இடிஎல்ஐ) கீழ் இழப்பீடு பெறவேண்டுமெனில்,PF கணக்கு வைத்திருக்கும் ஊழியர் குறைந்தது ஒரு வருடமாவது ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்திருக்க வேண்டும்.அவ்வாறு,ஒரு வருடத்திற்கும் குறைவாக பணிபுரிந்திருந்தால் அதற்கேற்பவே,PF தொகையானது வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்பது குறிப்பிடத்தகக்து.