சென்னை உள்பட 11 மாநகராட்சியில் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்- மத்திய அரசு.!

அடுத்த 2 மாதங்களுக்கு கொரோனா பாதிப்பை சமாளிக்க இந்த மாநகராட்சிகளில் சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்துவதை உறுதி செய்யவேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 138845 ஆக அதிகரித்து உள்ளது.  பலியானவர்களின் எண்ணிக்கை 4027 ஆக உயர்ந்து உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை  57721  ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ள்ளது.

மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, தமிழ்நாடு, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்காளம் ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 11 மாநகராட்சியில் தான் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 70% உள்ளனர். (தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக சென்னை மாநகராட்சி உள்ளது)

இது தொடர்பாக மத்திய சுகாதார துறை செயலாளர் பிரீத்தி சுதன் நேற்று முன்தினம் இந்த  11 மாநகராட்சியின் சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர்கள், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை அதிகமாக உள்ளதால் கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்தி,  உயிர் இழப்புகளை குறைக்க வேண்டும் என கூறினார்.

இந்த 11 மாநகராட்சிகளிலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக உள்ளது. குறுகிய காலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்த்துள்ளது.

இந்நிலையில், அடுத்த 2 மாதங்களுக்கு கொரோனா பாதிப்பை சமாளிக்க இந்த மாநகராட்சிகளில் சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய தனி வார்டுகள் அமைப்பது, வென்டிலேட்டர்கள், தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Dinasuvadu desk