அடக்குமுறைக்கெல்லாம் பயந்து இருந்தால் எப்போதோ திமுக செத்து போய் புல் முளைத்திருக்கும் – துரை முருகன்

வருமான வரித்துறை சோதனைக்கெல்லாம் திமுக அஞ்சாது என்று திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் பேட்டியளித்துள்ளார்.

சென்னை நீலாங்கரையில் உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள், செந்தாமரை வீடு மற்றும் மருமகன் சபரீசன் வீட்டிலும் 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அண்ணாநகர் திமுக வேட்பாளர் மோகனின் மகன் கார்த்திக், ஜீ ஸ்கொயர் பாலா வீட்டிலும் சோதனை மேற்கொள்கின்றனர்.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், தேர்தல் நேரத்தில் அரசியல் உள்நோக்கத்துடன் மு.க.ஸ்டாலினின் மகள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இத்தகைய செயல்களில் மத்திய அரசு ஈடுபடுவது ஜனநாயகம் அல்ல, நியாமான அரசியல் அல்ல, இது கண்டனத்துக்குரியது.

ஐ.டி ரெய்டு போன்ற அடக்குமுறைக்கெல்லாம் பயந்து இருந்தால் எப்போதோ திமுக செத்து போய் புல் முளைத்திருக்கும். ஆனால், இதெற்கெல்லாம் நாங்கள் எப்போதும் அஞ்சமாட்டோம். இதுபோன்ற பூச்சாண்டி செயல்களுக்கு திமுக ஒருபோதும் அஞ்சாது. இப்படிப்பட்ட நடவடிக்கை எங்களுக்கும் மேலும் மன உறுதியை தரும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், கண்துடைப்புக்காக அதிமுகவினரின் இடங்களில் ஐடி ரெய்டு நடத்தப்படுகிறது என்றும் திமுகவை பயமுறுத்தவே வருமான வரித்துறை சோதனை மேற்கொள்ளப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்