#Breaking:எய்ம்ஸூக்கு சரியான இடம் வழங்கினால் உடனே பணிகள் தொடங்கப்படும் -மத்திய அரசு..!

மதுரை எய்ம்ஸூக்கு சரியான இடத்தை தமிழக அரசு வழங்கினால் உடனே பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த புஷ்பவனம் என்பவர்,மதுரையில் தற்காலிக இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்க வேண்டும் என்று கூறி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

மேலும்,அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

“மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு 2018-ல் அறிவித்தது.பின்னர் 2019 ஆம் ஆண்டு பிரமர் மோடி நேரில் வந்து அடிக்கல் நாட்டினார்.எனினும்,தற்போது வரை அதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெறவில்லை.

ஆனால்,மதுரையுடன் அறிவிக்கப்பட்ட உத்திர பிரதேசம், ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், மேற்கு வங்காளம், தெலுங்கான உள்ளிட்ட 16  மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணிகள் நடைபெறுவதுடன், வெளிப்புற நோயாளிகள் பிரிவும் தொடங்கப்பட்டுள்ளது.

மேலும்,அசாம், குஜராத், ஜம்மு காஷ்மீர்,ஜார்கண்ட், இமாச்சலபிரதேசம் போன்ற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் நடைபெற்று வரும் நிலையில்,எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையும் தொடங்கப்பட்டுள்ளது.

ஆனால்,மதுரையில் மட்டும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிகள், வெளி நோயாளிகள் பிரிவு மற்றும் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையும் இன்னும் தொடங்கப்படவில்லை.எனவே, மதுரையில் தற்காலிக இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்கி, வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு மற்றும் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையை தொடங்க உத்தரவிட வேண்டும்”,என்று தெரிவித்தார்.

இதனையடுத்து,இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர் அமர்வு,”மதுரையில் தற்காலிக இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்து வெளிநோயாளிகள் பிரிவை தொடங்க முடியுமா?  என்பது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.

இந்நிலையில்,இதற்கு பதிலளித்துள்ள மத்திய அரசு,”தமிழக அரசு தரப்பில் இது தொடர்பாக எந்தவொரு கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை. மேலும்,வெளிநோயாளிகள் பிரிவு மற்றும் முதலாமாண்டு எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையும் தொடங்க தயார்.ஆனால்,அதற்கு சரியான இடத்தை தமிழக அரசு வழங்கினால் உடனே பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது.