மார்ச் 7ல் இலட்சியப் பிரகடனம், மார்ச் 10ல் வேட்பாளர் பட்டியல், மார்ச் 11ல் தேர்தல் அறிக்கை – முக ஸ்டாலினின் கடிதம்

திருச்சியில் ஒலிக்கும் தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம் வெற்றி முழக்கமாகட்டும் என முக ஸ்டாலின் கடிதம்.

இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கடிதத்தில், மார்ச் 7ம் தேதி இலட்சியப் பிரகடனம், மார்ச் 10- வேட்பாளர் பட்டியல், மார்ச் 11- தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் மற்றும் தேர்தல் பரப்புரைப் பயணம் என பத்தாண்டுகால இருளை விரட்ட புயலெனச் செயல்படப் போகிறோம் என கூறியுள்ளார். திருச்சியில் ஒலிக்கும் தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம் வெற்றி முழக்கமாகட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

எதிர்ப்பை நிறைவேற்றிடும் வகையில், தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம் எனும் தலைப்பில் மார்ச் 7ம் தேதி திருச்சியில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. அங்கு வெளியிடப்படும் இலட்சியப் பிரகடனம் ஒரு செயல் திட்ட ஆவணம் என்றும் ஆட்சிக்கு வந்தபின் நிறைவேற்றாவிட்டால் பொதுமக்கள் கேள்வி கேட்கலாம் என்ற உரிமையை வழங்க இருக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

நான் ஏற்கனவே சொன்னதுபோல, தமிழக மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள். வெற்றி நம் பக்கம் இருக்கிறது. திமுகவின் வெற்றியை எப்படியாவது தடுக்க என்பதையே இலக்காக கொண்டு செயல்படுகிறாரகள். நம் வெற்றியை தடுத்திட வேண்டும் என்ற நோக்கில் பல குறுக்கு வழிகளை கையாளுகிறார்கள். தபால் வாக்கு மீது அவநம்பிக்கை இல்லை, ஆனால் அதை கையாளும் முறையில் சந்தேகம் உள்ளது.

களம் தயார், கணைகளும் தயார், எப்படி எவ்வாறு ஏவிட வேண்டும் என்பதற்கான பயிற்சி பாசறைதான் தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம் சிறப்பு பொதுக்கூட்டம் என கூறியுள்ளார். உடன்பிறப்புகளின் வருகையால், களப்பணியால் அதிமுக ஆட்சி முடியட்டும், உதயசூரியனின் வெளிச்சத்தில் தமிழகம் விடியட்டும் என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார் முக ஸ்டாலின்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்