“ஆதினத்தைத் தோளில் சுமக்க நேரில் வருவேன்;நடத்தி காட்டுவோம்” – அண்ணாமலை அறிவிப்பு!

“ஆதினத்தைத் தோளில் சுமக்க நேரில் வருவேன்;நடத்தி காட்டுவோம்” – அண்ணாமலை அறிவிப்பு!

மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியமாக நடைபெறும் பட்டினப்பிரவேச விழாவில் தருமபுரம் ஆதினம் குரு மகா சன்னிதானத்தை பல்லக்கில் அமர வைத்து தூக்கி செல்ல தடை விதித்து, மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தார்.இதற்கு பாஜக,பாமக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

இதனையடுத்து,தனது உயிரே போனாலும் பரவாயில்லை என்றும் தானே சென்று தருமபுர ஆதீன பல்லக்கை சுமப்பதாகவும் மதுரை ஆதீனம் தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து,தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேச நிகழ்வில் விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.இதற்கு பதிலளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு,தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசம் குறித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

மேலும்,மே 22 ஆம் தேதிதான் பல்லக்கு தூக்கும் நிகழ்வு நடைபெறும் என்பதால் அதற்குள் ஆதீனத்துடன் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பேசி விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார் என்று அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்தார்.

இந்நிலையில்,ஆதினத்தைத் தோளில் சுமக்க தான் நேரில் வருவதை தமிழக அரசுக்குத் தெரிவித்துக் கொள்வதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.மேலும்,இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அண்ணாமலை கூறுகையில்:

“தருமபுர ஆதீனத்தின் பல நூற்றாண்டுகள் பழமையான ‘பட்டின பிரவேசம்’ மீதான தடை தமிழக நாகரிகம் மற்றும் கலாச்சாரத்திற்கு எதிரானது. ஆதினத்தைத் தோளில் சுமக்க நான் நேரில் வருவேன் என்பதைத் தமிழக அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த சட்டவிரோத உத்தரவை எதிர்த்து நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்குமாறு ஆதினத்திடம் கோரிக்கை வைப்போம்

கோபாலபுர குடும்பத்தை அவரது கட்சியினர் தூக்கிச் சுமப்பதை போல் அல்ல இது.ஊழியம் மற்றும் குருவுக்குச் செய்யும் சேவையின் உள்ள வேறுபாடுகளைக் கூட அறியாதவர் இந்த கோபாலபுர குடும்பத்தார்.இந்த நிகழ்ச்சியை பாஜக நடத்திக் காட்ட தயாராக இருக்கிறது’,என்று தெரிவித்துள்ளார்

இதனிடையே,திமுக கட்சியானது ஆன்மீகத்திற்கு எதிராக இருப்பது போல திட்டமிட்டு ஒரு சிலர் சித்தரிக்கின்றனர்.இது திராவிட மாடல் ஆட்சி,பேரறிஞர் அண்ணா உருவாக்கிய ஆட்சி.எனவே யாருக்கும் அடிபணிய மாட்டோம் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Join our channel google news Youtube