நான் பி.ஏ படிக்கும் போது 2 குழந்தைகள் இருந்தது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

படிப்பின் மேல் உள்ள தீராத தாகத்தால் நான் எப்படியாவது படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னை திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ படித்தேன்.

மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற ஜெயித்து காட்டுவோம் வா என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி கலந்து  உரையாற்றினார். அப்போது பேசிய அவர், வாழ்க்கையை ஜெயித்து காட்டுவதற்கு சில உதாரணங்களை சொல்கிறேன். நான் மிக ஏழ்மையான மிகவும் பிற்படுத்தப்பட்ட குடும்பத்தில் பிறந்தவன். பத்தாம் வகுப்பு வரைதான் எனது பெற்றோரால் படிக்க வைக்க முடிந்தது.

அதற்கு மேல் அவர்களால் படிக்க வைக்க இயலவில்லை. ஆனால் படிப்பின் மேல் உள்ள தீராத தாகத்தால் நான் எப்படியாவது படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னை திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ படித்தேன். இதற்கிடையில் எனக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகளும் இருந்தனர். அவர்களையும் படிக்க வைக்க வேண்டும். நானும் படிக்க வேண்டும். ஒரு இளங்கலைப் பட்டத்தை மூன்று ஆண்டுகள் படித்து முடிப்பார்கள். ஆனால் எனக்கு ஐந்து ஆண்டுகள் ஆனது.

தேர்வுகளில் அரியர் வைத்து, அரியர் வைத்து பின்னர் ஒருவழியாக 1995 பி.ஏ  பட்டப்படிப்பை முடித்தேன். அப்போது எனது மூத்த மகனுக்கு 10 வயது. அவனும் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தான். இதற்கிடையில் ஒரு பட்டம் எல்லாம் போதாது என்று நினைத்து பெங்களூரில் பி.எல் படிப்பதற்காக சேர்ந்தேன். கட்சிப் பொறுப்புகள், குடும்ப வறுமை, கடமை ஆகியவற்றுக்கு மத்தியில் மூன்று வருடங்களில் அந்த படிப்பையும் முடித்தேன்.

பத்தாம் வகுப்போடு எனது படிப்பும் முடிந்துவிட்டது என்று நான் நினைத்து இருந்தால், இன்றைக்கு என் பெயருக்குப் பின்னால் வழக்கறிஞர் என்று போட்டு இருக்க முடியாது. நான் ஒரு அரசியல்வாதியாகவும் இருந்திருக்கிறேன். மேயராகவும் இருந்திருக்கிறேன். சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துருக்கிறேன். இன்றைக்கு அமைச்சராக இருக்கின்றேன். நாளைக்கு இது எல்லாம் என்னை விட்டு போனாலும், என்னுடைய படிப்பு மட்டும் என்னை விட்டு போகாது. கடைசி நாளில் கூட ஒரு வழக்கறிஞராக நான் நீதிமன்றத்திற்கு கோர்ட் அணிந்து செல்வேன் என்று தெரிவித்தார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.