விளக்கமளிக்கவும், விவாதிக்கவும் நான் தயார் – ஆ.ராசா மீண்டும் சவால்
விளக்கமளிக்கவும், விவாதிக்கவும் நான் தயார் – ஆ.ராசா மீண்டும் சவால்
நான் தனி ஆளாக வந்து எது 2 ஜி வழக்கு ? எது ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு ? உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன என்பதை விவாதிக்கவும்,விளக்கமளிக்கவும் தயார் என்று ஆ.ராசா மீண்டும் சவால் அளித்துள்ளார்.
2 ஜி குறித்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி :
சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2ஜி ஊழல் மிகப்பெரிய ஊழல் என்று முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.மேலும் அவர் பேசுகையில், தமிழ்நாட்டின் பட்ஜெட் அளவுக்கு ஊழல் செய்யப்பட்டுள்ளது. ரூ.1.76 லட்சம் கோடி கொள்ளையடித்த கட்சி திமுக கட்சி கூறினார்.
முதலமைச்சர் பழனிசாமி பேச்சிற்கு பதில் :
முதலமைச்சர் பழனிசாமி பேச்சிற்கு பதில் அளிக்கும் வகையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், வீராணம் முதல் 2ஜி வரை திமுக மீதான பொய்யான குற்றச்சாட்டுகள் இதுவரை நிரூபிக்கப்படவில்லை.எடப்பாடி பழனிசாமிக்கு துணிவிருந்தால் இந்தியாவின் அத்தனை ஊடகங்கள் முன்பாக அதிமுக ஊழல் கட்சியா – திமுக ஊழல் கட்சியா என்று கோட்டையில் என்னுடன் விவாதிக்க வேண்டும் என்று சவால் விடுத்தார்.
ஸ்டாலின் கருத்து :
செய்தியாளர்களிடம் பேசிய முக ஸ்டாலின், ஆ.ராசா கேட்டதற்கு முதல்வர் பழனிசாமியை முதலில் பதில் தெரிவிக்க சொல்லுங்கள் என்று கூறிருந்தார்.
ஜெயலலிதா வழக்கறிஞர் ஜோதி பேட்டி :
பின்பு ,ஜெயலலிதா வழக்கறிஞர் ஜோதி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பற்றி ஆ.ராசாவுடன் விவாதிக்க அறிவாலயத்திற்கே தனியாக வரத் தயார்,ஆ.ராசா தயாரா என்று கேள்வி எழுப்பினார் .மேலும் அதிமுகவினரும் தொடர்ந்து கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
மீண்டும் சவால் விடுத்த ஆ.ராசா :
இந்நிலையில் இன்று மீண்டும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,முதலமைச்சருக்கு விளக்கம் தேவைப்பட்டால் நான் கோட்டைக்கு வருகிறேன்.நான் தனி ஆளாக வந்து எது 2 ஜி வழக்கு ? எது ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு ? உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன என்பதை விவாதிக்கவும்,விளக்குவதற்கும் தயார்.ஜெயலலிதா வழக்கு தொடர்பாக கோட்டையில் விவாதிக்கத் தயார் என கூறினேன். ஆனால் இன்றுவரை முதலமைச்சரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.என்னை அழைக்கவும் இல்லை.ஆனால் வெவ்வேறு ஆட்கள் மூலமாக பொய் சொல்லி வருகிறார்கள்.எது பொய் ? எது உண்மை என்பதை விளக்குவதற்காக நான் கடமைப்பட்டுள்ளேன். 2ஜி வழக்கு ஜோடிக்கப்பட்டது என்பதற்கு ஆதாரமாக தீர்ப்பு நகலை ஊடங்களுக்கு கொடுத்துள்ளேன்.2 ஜி வழக்கில் வதந்தி, கிசுகிசு யூகம் என்பது தான் என நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.2ஜி வழக்கு தொடர்பாக முதல்வர் தனது தகுதியை மறந்து மிக மோசமாக விமர்சித்துள்ளார்.மக்களாட்சி தத்துவத்தின் அடித்தளமான அரசமைப்பு சட்டத்தின்மீது நடத்தப்பட்ட மன்னிக்க முடியாத படுகொலை என ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.