மனைவியை மலையிலிருந்து தள்ளி விட்டு கொலை செய்த கணவன் கைது…!

விடுமுறை நாளில் மனைவியை சுற்றிப்பார்க்க மலைக்கு அழைத்து சென்று, மலையிலிருந்து தள்ளிவிட்டு கொலை செய்த கணவன் கைது.

ஜூன் மாதம் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள நைனிடால் மலையிலிருந்து தனது மனைவியை தள்ளி விட்டு கொன்றதாக 24 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் கூறுகையில் உயிரிழந்த பெண்ணை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்த நபர் விடுமுறை நாளை கழிக்க மலைக்கு தனது மனைவியை அழைத்து சென்று தள்ளிவிட்டு கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்ததாக தெரிவித்துள்ளனர்.

ஆனால், அந்தப் பெண்மணி எங்கேயோ தன்னை விட்டு விட்டு ஓடி விட்டார் என அவர் தனது குடும்பத்தினரிடம் கூறியதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த 24 வயது நபர் கடந்த ஆண்டு ஜூலை 14-ஆம் தேதி 29 வயதுடைய பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக, அந்த பெண் இவர் மீது எப்ஐஆர் பதிவு செய்துள்ளார். இதன் அடிப்படையில் அந்த நபர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு திகார் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

அதன் பின்பு அந்த பெண் தனது புகாரை வாபஸ் பெற விரும்புவதாகவும், குற்றம் சாட்டப்பட்டவரும் தானும் திருமணம் செய்து கொள்வதாகவும் ஒரு பத்திரத்தை சமர்ப்பித்துள்ளார். அதன் பின்பு அந்த நபருக்கு அக்டோபர் 10ஆம் தேதி ஜாமீன் வழங்கப்பட்டதுடன் அதே பெண்ணை அவர் திருமணமும் செய்து கொண்டுள்ளார். ஆனால் இவர்கள் இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை தொடர்ந்து கொண்டே இருந்துள்ளது. எனவே, அந்தப் பெண் கடந்த ஜூன் மாதம் 7ஆம் தேதி சண்டையிட்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அதன் பின்பு கடந்த ஜூன் 11ஆம் தேதி இந்த நபர் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று தன்னுடன் வந்து விடுமாறு கேட்டுள்ளார். ஆனால் அந்த பெண்ணின் தாயார் அவரை அனுப்ப மறுத்ததன் காரணமாக, கடுமையான வாக்குவாதம் எழுந்துள்ளது. பின் சமாதானப்படுத்தி தனது மனைவியை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அதன் பின்பு ஜூன் 15ஆம் தேதி அவரது பெற்றோர்கள் அந்தப் பெண்மணிக்கு போன் செய்து பார்த்த பொழுது அவர் போனை எடுக்காததாலும், பல நாட்கள் அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததாலும் தான் போலீசாரிடம் புகார் அளித்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மேற்கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
Rebekal