உப்புமாவில் சுவையான மாலைநேர ஸ்நாக்ஸ் செய்வது எப்படி.?

பிரட்-ஐ பயன்படுத்தி சுவையான மாலைநேர ஸ்நாக்ஸான   உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

உப்புமாவில் பல வகைகள் உண்டு. சிலருக்கு தினமும் சாப்பிட்டு வெறுப்பு கூட இருக்கும். ஆனால் இந்த உப்புமாவை கொண்டு எப்படி சூடான சுவையான ஸ்நாக்ஸ் செய்வது என்று தான் இன்று பார்க்க உள்ளோம். அதாவது சுவையான பிரட் உப்புமா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

பிரட் ஸ்லைஸ் -10
பச்சை பட்டாணி – 1/2 கப்
உருளைக்கிழங்கு – 1
கேரட் – 1
பீன்ஸ் – 6
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 2
எலுமிச்சம் பழம் – 1/2 பீஸ்
இஞ்சி – 1
கடுகு – 1/2 மேஜைக்கரண்டி
சீரகம் – 1/2 மேஜைக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4மேஜைக்கரண்டி
மிளகாய் தூள் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
நெய் – தேவையான அளவு
கருவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை :

முதலில் வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, பீன்ஸ், கேரட், பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை, மற்றும் கொத்தமல்லியை நறுக்கி வைக்க வேண்டும். அதன் பின் பச்சை பட்டாணியை உரித்து, அதனை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்துள்ள பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.

பச்சை பட்டாணி 95 சதவீதம் வெந்த பின் அதில் உள்ள தண்ணீரை வடிகட்டி, பட்டாணியை தனியாக தட்டில் எடுத்து வைத்து கொள்ளவும்.அதன் பின் எலுமிச்சம் பழத்திலுள்ள சாறை தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்து கொள்ளவும். அடுத்து பிரட்டுகளை மைக்ரோவேவ் ஓவனிலோ அல்லது பேன் பயன்படுத்தியோ சுமார் 3 நிமிடம் வரை சூடாக்கிய பின் அந்த பிரட்டுகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும்.

அதன் பின் மிதமான சூட்டில் அடுப்பில் பேனை வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெயையும், ஒரு மேஜைக்கரண்டி அளவு நெய்யையும் ஊற்றி சூடாக்கி கொள்ளவும்.எண்ணெய் சூடாகிய பின் அதில் கடுகை போட்டு விட்டு, அது வெடித்ததும் அதில் சீரகத்தை போட்டு வறுக்கவும்.

அடுத்த அரை நிமிடத்தில் அதில் ஏற்கனவே நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை போட்டு வதக்கவும்.வெங்காயம் கண்ணாடி பதம் ஆன பின்னர் அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள இஞ்சி மற்றும் கருவேப்பிலையை போட்டு வதக்கவும்.

இஞ்சியின் பச்சை வாசம் போன பின் அதில் ஏற்கனவே நறுக்கி வைத்துள்ள பீன்ஸ், உருளைக்கிழங்கு, கேரட் மற்றும் வேக வைத்து எடுத்து தனியாக வைத்திருக்கும் பச்சை பட்டாணியை போட்டு நன்றாக கலந்து வேக வைக்கவும்.
அதன் பின் சுமார் 10 நிமிடத்திற்குப் பிறகு அதில் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை போட்டு வேக வைக்கவும்.

அதன் பின் சுமார் 2 நிமிடத்திற்கு பிறகு அதில் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, மற்றும் தேவைக்கேற்ப மிளகாய் தூளை சேர்த்து வேக வைக்கவும்.
அதனை வேக வைத்த ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலக்கவும்.அதன் பின் தக்காளியை நன்றாக வெந்த பின்
அதில் நாம் ஏற்கனவே பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை சாறை அதில் ஊற்றி கலக்கவும்.

பின்பு அந்த மசாலா கலவையில் toast செய்து துண்டாக்கி வைத்துள்ள பிரட்டு துண்டுகளை போட்டு மசாலாவோடு சேருமாறு கிளறி விட்டு வேக வைக்கவும்.
வேக விட்ட ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லியை தூவி கிளறி விட்டு அடுப்பை அணைத்து விடவும்.தற்போது சூடான பிரட் உப்புமா ரெடி.