வீட்டில் சிக்கன், மட்டன் இல்லையா சூப்பரான பிரியாணி இப்படி செய்யலாம்..!

வீட்டில் சிக்கன், மட்டன் இல்லை என்றாலும் அசைவ சுவையில் சூப்பரான சுவையான முட்டை பிரியாணி இப்படி செய்து பாருங்கள்.

வீட்டில் மட்டன், சிக்கன் சேர்த்து செய்யும் பிரியாணி என்றாலே அதில் இருக்கும் சுவை தனி தான். இருந்தாலும் எல்லா நாட்களிலும் இவற்றை வாங்க முடியாது. அப்படி வாங்காத தருணத்தில் எளிமையாக வீட்டில் முட்டை வைத்து சூப்பராக பிரியாணி செய்யலாம். எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்: பிரியாணி அரிசி – 1/2 கிலோ, முட்டை – ஐந்து, எண்ணெய் – ஆறு ஸ்பூன், நெய் – 1 ஸ்பூன், பிரியாணி இலை – ஒன்று, பட்டை சிறிய துண்டு – ஒன்று, ஏலக்காய் – இரண்டு, சோம்பு – 1/2 ஸ்பூன், கிராம்பு – இரண்டு, மராட்டி மொக்கு – ஒன்று, ஸ்டார் பூ – ஒன்று, இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன், கொத்தமல்லி – 1 கைப்பிடி, புதினா தழை – 1 கைப்பிடி, தனி மிளகாய்த் தூள் – 1 1/2 ஸ்பூன், வெங்காயம் – ஒன்று, தக்காளி – இரண்டு, பச்சை மிளகாய் – இரண்டு, வரமிளகாய் – இரண்டு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: முதலில் முட்டையை எடுத்து நன்கு வேக வைத்து கொள்ளுங்கள். பிறகு அதன் தோலை உரித்து எடுத்து கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் இவற்றை நீள்வாக்கில் நறுக்கி வைத்து கொள்ளுங்கள். அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். நன்கு வதங்கிய பிறகு இதில் கால் ஸ்பூன் உப்பு சேர்த்து இதனுடன் அரை ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து வதக்குங்கள். பின்னர் இதில் வேக வைத்துள்ள முட்டையை இரண்டாக கீறி விட்டு அதில் நன்கு கலந்து விடவும். பின் இதனை இறக்கி வைத்து விடுங்கள். மேலும், அடுப்பில் குக்கரை வைத்து அதில் நெய் சேர்த்து தாளிப்பதற்கு இருக்கும் பொருட்களை சேர்த்து தாளித்து கொள்ளுங்கள். பின்னர் இதில் வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

மேலும், இதனுடன் வரமிளகாய், புதினா, கொத்தமல்லி 1 ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து கலந்து விடுங்கள். அரிசிக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள். ஊற வைத்த அரிசியை(20 நிமிடம்) இதில் சேர்க்க வேண்டும். அரிசி சேர்க்கும்போது அதனுடன் தேவையான அளவு உப்பையும் சேர்க்க வேண்டும். பின்னர் குக்கரை மூடி வேக வைத்து கொள்ளுங்கள். ஆவி அடங்கிய பிறகு குக்கரை திறந்து அதன் மேல் வேக வைத்து மசாலாவில் பிரட்டி வைத்துள்ள முட்டையை அதன் மேல் அப்படியா சேர்க்க வேண்டும். கிளற வேண்டாம். அதனை மீண்டும் மூடி போடு 1 விசில் வைக்க வேண்டும், அல்லது 5 நிமிடம் வேக வைக்கலாம். பின்னர் ஆவி அடங்கிய பிறகு குக்கரை திறக்க வேண்டும். அவ்வளவு தான் சூடான சுவையான முட்டை பிரியாணி ரெடி.