“மழை பாதிப்பு:உங்களோடு நானும் களத்தில் நிற்கிறேன்;நிற்பேன்” – முதல்வர் ஸ்டாலின்!

சென்னை:கொட்டும் மழையில் பணியாற்றி வரும் மாநகராட்சி, மின்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகளுக்கு நாம் எத்தனை நன்றி கூறினாலும் போதாது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை தீவிரம் மற்றும் வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே மிதமான மழை முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால்,பல்வேறு பகுதிகளில் மக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக,சென்னையில் வழக்கத்தைக் காட்டிலும் மிக அதிக அளவில் பெய்து வரும் தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளது.இதனால்,மழை நீரை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து,சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பட்டாளம், புளியந்தோப்பு நெடுஞ்சாலை, டிமெலோஸ் சாலை பகுதிகளில் நேற்று முதல்வர் நேரில் ஆய்வுசெய்து, தேங்கியுள்ள நீரை விரைவாக வெளியேற்ற அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

இந்நிலையில்,மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் அனைவரும் நேரம், காலம் பார்க்காது களத்திலேயே இருந்து பணியினைத் தொடர்ந்து மேற்கொள்ளுமாறும்,மக்களோடு முதலமைச்சராகிய தானும் களத்தில் நிற்பதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

” சென்னையில், கடந்த 200 ஆண்டுகளில் ஒரே மாதத்தில் 1000 மி.மீ மழை பதிவாவது இதுதான் நான்காவது முறை என்கிறார்கள் வானிலை வல்லுநர்கள். இத்தகைய கடும் மழைப் பொழிவிலும் உயிர்ப்பலிகளைத் தடுத்து; முடிந்தவரை உடமைச்சேதங்களைக் குறைத்து; பாதிப்புகள் விரைந்து சரிசெய்யப்பட்டு;நிலைமை கட்டுக்குள் இருப்பதை உறுதிசெய்துள்ளதற்கு முழுமுதற்காரணம், ஓய்வுறக்கமின்றி நாள் முழுதும் கொட்டும் மழையில் பணியாற்றி வரும் மாநகராட்சி, மின்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள்தான். அவர்களுக்கு நாம் எத்தனை நன்றி கூறினாலும் போதாது!

அடுத்த சில நாட்களுக்கும் மிக அதிக மழை தொடரும் என அறிவிக்கப்பட்டிருப்பதால், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் அனைவரும் நேரம், காலம் பார்க்காது களத்திலேயே இருந்து பணியினைத் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்களோடு முதலமைச்சராகிய நானும் களத்தில் நிற்கிறேன்; நிற்பேன்”,என்று தெரிவித்துள்ளார்.