காட்டடி அடித்த ஹர்திக், ஜடேஜா…ஆஸ்திரேலியாவிற்கு 303 ரன் இலக்கு..!

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஷிகர் தவான், சுப்மான் கில் இருவரும் களமிறங்கினார். ஆனால் ஆட்டம் தொடக்கத்திலேயே ஷிகர் தவான் 16 ரன்னில் தனது விக்கெட்டைஇழக்க, இதைத் தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி களமிறங்கினார். நிதானமாக விளையாடி வந்த சுப்மான் கில் 33 ரன் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார்.

இதையடுத்து, களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐய்யர் 19 ரன்களில் வெளியேறினார். சிறப்பாக விளையாடி வந்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அரைசதம் அடித்த 63 ரன்னில் பெவிலியன் திரும்பினார். பின்னர் இறங்கிய ஹர்திக் பாண்டியா, ரவீந்தர் ஜடேஜா இருவரும் சிறப்பாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.

அதிரடியாக விளையாடி வந்த ஹர்திக் பாண்டியா 76 பந்தில் 92 ரன்கள் குவித்தார். ரவீந்தர் ஜடேஜா 50 பந்தில் 66 ரன்கள் குவித்தார். இறுதியாக இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 302 ரன்கள் எடுத்தனர். கடைசி வரை களத்தில் ஹர்திக் பாண்டியா 92 ரன்களுடனும், ரவீந்தர் ஜடேஜா 66 ரன்களுடனும் நின்றனர்.

author avatar
murugan