தேசிய செயலாளர் பதவியிலிருந்து ஹெச்.ராஜா விடுவிப்பு ? பொன். ராதாகிருஷ்ணன் விளக்கம்

தேசிய செயலாளர் பதவியிலிருந்து ஹெச்.ராஜா விடுவிக்க காரணம் என்னவென்று பொன். ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

அண்மையில் பாஜகவின் புதிய தேசிய நிர்வாகிகள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஜே.பி நாட்டா வெளியிட்டார்.  அந்த பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை. 12 துணைத் தலைவர்கள், 8 பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டது.

குறிப்பாக பாஜகவின் தேசிய செயலாளர் பதவியில் இருந்த ஹெச்.ராஜா பெயர் இடம் பெறவில்லை. செய்தி தொடர்பாளர் பட்டியலில் கூட தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பாஜக நிர்வாகிகள் கூடஇடம்பெறவில்லை.இதனால் தமிழக பாஜகவில் சற்று அதிருப்தி நிலவி வந்தது.

இந்நிலையில் தேசிய செயலாளர் பதவியிலிருந்து ஹெச்.ராஜாவை  விடுவித்தது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் கேள்வி எழுப்பினார்கள் செய்தியாளர்கள் .இதற்கு பதில் அளித்த அவர் ,பொதுவாக பதவிகள் வழங்கப்படும்போது ஒரு பொறுப்பாளருக்கு ஒரு  பதவி கொடுக்கப்படும். இன்னொரு பதவியை  மாற்றி கொடுப்பது என்பதெல்லாம் நடைபெறும் . இந்த பதவி  இல்லையென்றால் வேறுவிதமான பதவிகள் கொடுக்க வாய்ப்புகள்  உள்ளது என்று தெரிவித்துள்ளார்.