#Breaking:குஜராத் சட்டசபை சபாநாயகர் ராஜேந்திர திரிவேதி ராஜினாமா..!

குஜராத் சட்டசபை சபாநாயகர் ராஜேந்திர திரிவேதி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பாஜகவை சேர்ந்த விஜய் ரூபானி கடந்த 2016-ம் ஆண்டு முதல் முதல்வராக இருந்து வந்த நிலையில்,கடந்த 5 நாட்களுக்கு முன்னர் திடீரென ஆளுநரை சந்தித்து அவர் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து, குஜராத்தில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குஜராத்தின் 17-வது முதல்வராக பூபேந்திர படேல் தேர்வு செய்யப்பட்டார்.அதன்பின்னர்,கடந்த 13 ஆம் தேதியன்று குஜராத் மாநிலத்தின் 17-வது முதலமைச்சராக பூபேந்திர படேல் பதவி ஏற்றுக்கொண்டார்.அவருக்கு ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில்,குஜராத் சபாநாயகர் ராஜேந்திர திரிவேதி,இன்று முதல்வர் பூபேந்திர பட்டேலின் கீழ் புதிய அமைச்சரவை பதவியேற்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக தனது பதவியை ராஜினாமா செய்தார்.

மேலும்,இது தொடர்பாக,குஜராத் சட்டமன்றத்தின் செயலாளர் டி எம் பட்டேல் வெளியிட்ட அறிவிப்பில்,”குஜராத் சட்டமன்ற சபாநாயகர் பதவியில் இருந்து செப்டம்பர் 16, 2021 முதல் விலகுவதாக ராஜேந்திர திரிவேதி தனது கையால் எழுதியுள்ளார்.எனவே, சட்டசபையில் சபாநாயகர் அலுவலகம் செப்டம்பர் 16, 2021, காலையிலிருந்து காலியாகிவிட்டது” என்று கூறப்பட்டுள்ளது.

திரிவேதி அவர்கள் பிப்ரவரி 19, 2018 அன்று சபாநாயகராக பொறுப்பேற்றார். இரண்டு முறை எம்எல்ஏவாக இருந்த திரிவேதி முன்பு விளையாட்டு, இளைஞர் மற்றும் கலாச்சார நடவடிக்கைகள் மற்றும் யாத்திரை மேம்பாட்டுக்கான அமைச்சராக (பொறுப்பு) இருந்தார்.இந்த நிலையில்,திரிவேதி, உடனடியாக ராஜினாமா செய்வதாகக் கூறி, துணை சபாநாயகரிடம் தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்துள்ளார்.