குரூப்- 2ஏ தேர்வில் முறைகேடு.! ஒரே குடும்பத்தில் 4 பேர் மாநில அளவில் ரேங்க்..! காவலர் சித்தாண்டி தலைமறைவு.!

  • சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் சித்தாண்டி என்பவர், தனது குடும்ப உறுப்பினர்கள் 4 பேரை, குரூப்- 2ஏ தேர்வில் முறைகேடாக தேர்வு எழுத வைத்து, தேர்ச்சி பெற வைத்ததாக, புகார் எழுந்தது.
  • இதுதொடர்பாக காவலர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களிடம், போலீசார் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி போலீசார் சிவகங்கைக்கு நேரில் சென்றபோது காவலர் சித்தாண்டி தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( டிஎன்பிசி ) கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்திய குரூப்-4 எழுத்து தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்த தேர்வு முறைகேடு தொடர்பாக இடைத்தரகர்கள், அரசு ஊழியர்கள் உட்பட இதுவரை 14 பேர் கைதாகியுள்ளனர். இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக 99 தேர்வர்கள் வாழ்நாள் முழுவதும் அரசுப்பணிக்கான தேர்வெழுத தடை விதிக்கப்பட்டிருப்பதோடு, அரசு ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த முறைகேட்டில் முக்கிய குற்றவாளியான இடைத்தரகர் ஜெயக்குமாரை போலீசார் தேடி வருகின்றனர். இதுபோல குரூப்-2ஏ தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் சித்தாண்டி என்பவர், தனது குடும்ப உறுப்பினர்கள் 4 பேரை, குரூப்- 2ஏ தேர்வில் முறைகேடாக தேர்வு எழுத வைத்து, தேர்ச்சி பெற வைத்ததாக, புகார் எழுந்தது. இதுதொடர்பாக காவலர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களிடம், போலீசார் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி போலீசார் சிவகங்கைக்கு நேரில் சென்றபோது காவலர் சித்தாண்டி தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே, அவரது சகோதரரும், காரைக்குடி சார்-பதிவாளருமான வேல்முருகனிடம், சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இவர், கடந்த 2018-ம் ஆண்டு குரூப்-2 ஏ தேர்வு எழுதி வெற்றி பெற்றவர், என தகவல்கள் வெளியாகியுள்ளன. பின்னர் காவலர் சித்தாண்டியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதனிடையே, குரூப் 4 தேர்வைப் போல், ராமநாதபுரம் மாவட்டத்தில் குரூப் 2-ஏ தேர்வை முறைகேடாக எழுதி வெற்றி பெற்று தற்போது அரசுப்பணியில் உள்ள 37 அதிகாரிகளை, விசாரணைக்கு அழைக்க டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி, 1,953 காலிப் பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, ராமேஸ்வரத்தில் குரூப் 2 ஏ தேர்வை எழுதி, தரவரிசைப் பட்டியலில் முதல் 37 இடங்களில் தேர்வாகி, தற்போது அரசுப் பணியில் உள்ள 23 பெண்கள், 14 ஆண்களை, நேரில் விசாரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில், பிப்ரவரி 3-ம் தேதி, அவர்களை விசாரணைக்கு ஆஜராகுமாறு, டிஎன்பிஎஸ்சி சம்மன் அனுப்ப உள்ளது. தவறு நடந்திருப்பது உறுதியானால், 37 பேரும் தகுதி நீக்கம் செய்யப்படுவதுடன், 2017-ல் நடைபெற்ற குரூப் 2-ஏ தேர்வு தரவரிசையிலும், மாற்றம் கொண்டு வர, டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்