தமிழக ஆளுநரை திரும்பப்பெற வேண்டும் – குடியரசுத் தலைவருக்கு திருமாவளவன் கடிதம்

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு ,தொல்.திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் தமிழக அரசு இயற்றியது. இதனால் உடனடியாக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இதற்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.

ஆனால் எதிர்க்கட்சிகள் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.மேலும் அரசு ஆளுநரை சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.இதனால் 7.5% உள் ஒதுக்கீடு தொடர்பாக ஆளுநருடன் 5 அமைச்சர்கள் சந்தித்தனர்.

இதன் பின் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் தருவதாக ஆளுநர் உறுதியளித்துள்ளதாக கூறினார். இந்நிலையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு ,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார்.அவரது கடிதத்தில்,

 தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், இந்த அரசியலமைப்புச் சட்டக் கடமையை நிறைவேற்றாமல் இருப்பது மட்டுமின்றி மாநில அரசின் செயல்பாடுகளுக்குப் பல்வேறு தடைகளையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்குவதற்காக தமிழக சட்டப்பேரவையில் தற்போதுள்ள தமிழக அரசு ஒருமனதாக சட்டம் ஒன்றை நிறைவேற்றியது. தற்போது தமிழக அரசு நிறைவேற்றியுள்ள சட்டம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதாகும்.

ஆனால், தமிழக ஆளுநர் அந்தச் சட்டத்துக்கு ஒப்புதல் வழங்காமல் தேவையற்ற கால தாமதத்தைச் செய்து கொண்டிருக்கிறார். எனவே, இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு, தமிழக ஆளுநரை உடனடியாகத் திரும்பப் பெற்று அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்குமாறு தங்களை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.