பணியின் போது இறந்த காவலர்களுக்கு ரூ.1 கோடி வழங்குவதை போல மின்வாரிய ஊழியர்களுக்கும் வழங்குக! – வைகோ

இறந்த மின்வாரிய ஊழியர்கள் குடும்பத்திற்கும், ஒரு கோடி ரூபாய் நிதி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி நிவர் புயல் தாக்கியபோது காஞ்சிபுரம் அருகே உள்ள ஈச்சம்பாக்கம் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் மற்றும் மின் நிலைய அதிகாரியான திரு சுந்தரராஜன் உதவி பொறியாளர் அவர்களிடம் தகவல் தெரிவித்தனர்.

இதனை அடுத்து அவசர வேலை என்பதால், பக்கத்து மின் நிலையத்தில் நிரந்தர ஊழியராக பணியாற்றி வந்த பாக்கியநாதன் மற்றும் ஒப்பந்த தொழிலாளர் தயாளன் ஆகியோர் இருவரையும் சரிசெய்ய கூறியுள்ளனர். அந்த விவரத்தை சக பணியாளர்களுக்கு அவர் தெரிவிக்காத நிலையில், இருவரும் இரவு 11:30 மணியளவில் டார்ச்லைட் உடன் மழை நீர் தேங்கி இருந்த பகுதிக்கு சென்று, அறுந்து விழுந்த வயர்களை சுற்றிக் கொண்டிருக்கும் போது, மின் நிலையத்திற்கு வந்த மற்றொரு பணியாளர் மின் இணைப்பு கொடுத்துள்ளார். இந்த மின்சாரம் பாய்ந்தது பாக்கியநாதன் மற்றும் தயாளன் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், உதவி பொறியாளர் சுந்தரராஜன் அவர்களின் கவனக் குறைவால்  இந்த சம்பவம் நடைபெற்றதால், சுந்தரராஜன் உள்ளிட்ட 4 பேரை தமிழக அரசு பணி இடைநீக்கம் செய்துள்ளது. மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த இரண்டு  குடும்பத்தினரிடமும்  மூன்று லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பணியின் போது இறந்த காவலர்களுக்கு தமிழ்நாடு அரசு ஒரு கோடி ரூபாய் வழங்குகிறது. எனவே பேரிடர் பணியின்போது இறந்த மின்வாரிய ஊழியர்கள் குடும்பத்திற்கும், ஒரு கோடி ரூபாய் மறுவாழ்வு நிதி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வைகோ அவர்கள் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.