ஆண்களே உஷார்! டிக்டாக் மூலம் இளம்பெண் விரித்த வினோத வலையில் சிக்கி ரூ.97,000-ஐ இழந்த இளைஞர்!

டிக்டாக் மூலம் ரூ.97,000-ஐ இழந்த இளைஞர். இளைஞரை ஏமாற்றிய இளம்பெண் சுசி கைது.

இன்று அதிகமான இளைஞர்கள் மற்றும் பெண்கள் டிக்டாக்கிற்கு அடிமையாகியுள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். தங்களுடைய அதிகமான நேரத்தை டிக் டாக்கில் தான் செலவிடுகின்றனர். தற்போது ஊரடங்கை சாதகமாக பயன்படுத்தி, வீட்டில் இருப்பவர்கள் அதிகமாக இணையதளத்தில் தான் உலாவி வருகின்றனர். 

இந்நிலையில், மதுரையை சேர்ந்த 23 வயதான இளைஞர் ராமசந்திரன். இவர் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். தற்போது விடுமுறை என்பதால், வீட்டில் இருக்கும் ராமசந்திரன், டிக்டாக் மற்றும் முகநூலில் அதிகமாக தனது நேரத்தை செலவிட்டு வந்துள்ளார். 

இதனையடுத்து, டிக்டாக்கில் திருப்பூரை சேர்ந்த சுசி என்கின்ற பெண், அம்முக்குட்டி என்கின்ற பெயரில் ராமசந்திரனுக்கு அறிமுகமாகியுள்ளார். இதனையடுத்து, சுசி என்கின்ற அம்முக்குட்டியிடம் இவர் தனது அதீத அன்பை வெளிக்காட்டிய நிலையில், இவர்கள் இருவரும் முகநூல் பக்கத்திலும் உரையாடி வந்துள்ளனர். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சுசி, தனது  குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும், எனவே, மருத்துவமனை செலவுக்கு பணம் வேண்டும் என்றும் கூறியுள்ளார். 

அவரது பேச்சை நம்பிய ராமசந்திரன், சுசியின் வங்கி கணக்கிற்கு ரூ.97,000 பணத்தை அனுப்பி வைத்துள்ளார். பணத்தை  பெற்றுக் கொண்ட சுசி அவருடன் பேசாமல் விட்டதுடன், இணைய பக்கத்திலும் தலைகாட்டாமல் இருந்துள்ளார். இதனையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராமசந்திரன், மதுரை எஸ்.எஸ்.காலனி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். 

அவர் அளித்த புகாரின் பேரில், போலீசார் சுசி மீது வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து தேட துவங்கினர். திருப்பூர், ஆலங்காடு பகுதியில் உள்ள அவரது வீட்டில் பதுங்கி இருந்த சுசியை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர் மோசடி செய்ய பயன்படுத்திய விலையுயர்ந்த செல்போனை பறிமுதல் செய்த போலீசார், அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி, சிறையில் அடைத்தனர். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.