தலைநகர் டெல்லியில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற உள்ள ஜி20 உச்சி மாநாட்டை உலகமே தற்போது உற்று நோக்கும் வகையில் இந்தியா தலைமை தாங்கி நடத்தி வருகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள ஜி20 கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்கள் தலைநகர் டெல்லிக்கு வருகை தந்த வண்ணம் இருக்கின்றனர்.
இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, தென் கொரியா, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா என 20 நாட்டுத் தலைவர்கள் ஒரே இடத்தில் கூட உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் டெல்லியில் பன்மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளன.
ஜி20 மாநாடடில் பங்கேற்க வரும் உலக நாட்டு தலைவர்களுக்கு டெல்லியில் இந்திரா காந்தி விமான நிலையத்தில் அரசு முறை வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. ஜி20 மாநாட்டிற்கு வரும் தலைவர்கள் டெல்லியில் பாரத் மண்டபத்திற்கு அருகே உள்ள நட்சத்திர விடுதிகளில் தங்க வைக்கப்பட உள்ளனர்.
இந்நிலையில், ஜி20 மாநாட்டிற்கு வரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசவுள்ளதாக, வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (என்எஸ்ஏ) ஜேக் சல்லிவன் கூறியுள்ளார். அவர் கூறியதாவது, “அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசுவார். இது பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணத்தைப் நினைவு கூறுவதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும்.”
“மேலும் ஜிஇ ஜெட் என்ஜின் பிரச்சினை, MQ-9 ரீப்பர்கள், 5G/6G, முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் ஒத்துழைப்பு மற்றும் சிவில் அணுசக்தி பகுதி உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து பேசியுள்ளனர். அவர்கள் இருவரும் நாளை சந்திக்கும் போது இவை அனைத்தையும் நினைவுப்படுத்துவோம். இது நமது நாடுகளுக்கிடையேயான உறவின் ஆழத்தைக் காட்டுகிறது.” என்று கூறினார்.