ஜி20 மாநாட்டை முடித்துக் கொண்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெல்லியில் இருந்து வியட்நாம் புறப்பட்டுச் சென்றார்.
உலகமே உற்று நோக்கும் வகையில், இந்தியா 18வது ஜி20 உச்சி மாநாட்டை தலைமை தாங்கி தலைநகர் டெல்லியில் நேற்று முதல் வெற்றிகரமாக நடத்தி வருகிறது. நேற்று துவங்கிய இந்த மாநாடு இன்று இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட ஜி20 கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியாவிற்கு இரண்டு நாள் பயணமாக, G20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக கடந்து வெள்ளிக்கிழமை டெல்லிக்கு வந்து, அதே நாளில் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
50 நிமிடங்களுக்கு மேல் நடந்த பேச்சு வார்த்தையில், மோடியும் பைடனும் இருதரப்பு முக்கிய பாதுகாப்பு கூட்டாண்மைக்கு உறுதியளித்தனர். நேற்றைய தினம் ஜி20 உச்சிமாநாட்டின் முதல் அமர்வில் ஜோ பைடன் கலந்து கொண்டார்.
அந்த வகையில், இன்று காலை டெல்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டில் அஞ்சலி செலுத்திய பின்னர் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெல்லியில் இருந்து விமானம் மூலம் வியட்நாம் புறப்பட்டார்.