G20 Summit: பிரதமர் மோடியின் மேசையில் இந்தியாவிற்கு பதிலாக ‘பாரத்’ என பெயர் பலகை.!

By

PMModiG20

உலகமே தற்போது உற்று நோக்கும் வகையில் இந்தியா தலைமை தாங்கி நடத்தும் 18வது ஜி20 உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றும் நாளையும் நடக்கவுள்ள இந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட ஜி20 கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதில் பொருளாதார மேம்பாடு, காலநிலை மாற்றம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நாளில் ஒரேபூமி என்ற தலைப்பிலும், ஒரே குடும்பம் என்ற தலைப்பில் 2 கட்டமாக ஆலோசனை நடைபெறவுள்ளது. அதன்படி மாநாடு தொடங்கிய நிலையில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் உலகத்தலைவர்கள் அமரும் இருக்கையில் அவர்கள் நாட்டின் பெயர்ப்பலகை ஆனது வைக்கப்பட்டிருக்கும். அதன்படி, பிரதமர் நரேந்திர மோடி அமர்ந்திருக்கும் இருக்கை பலகையில் இந்தியா என்பதற்கு பதிலாக “பாரத்” என பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரின் போது, இந்திய தண்டனை சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகியவற்றில் இருக்கும் இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்ற மத்திய அமைச்சர் அமித்ஷா மசோதா தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.