மதுரையில் எய்ம்ஸ் அமைக்க முழு ஒத்துழைப்பு – தமிழக அரசு!

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

மதுரையை சேர்ந்த புஷ்பவனம் என்னும் நபர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து இருந்ததாகவும், கட்டுமான பணிகள் தொடங்குவதற்கு 2018 ஆம் ஆண்டு பிரதமர் மோடி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு தற்போது வரை எந்த பணியும் தொடங்கவில்லை எனவும், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பின்பதாக இந்தியாவின் மற்ற மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட மருத்துவ மனைகளுக்கான கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் இன்னும் நடைபெறவில்லை என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த மனுவை விசாரித்த நீதிபதி சிவஞானம் அடங்கிய அமர்வு, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணியை தொடங்குவதற்கு மாணவர் சேர்க்கை நடத்துவதற்கும் நாங்கள் தயார் என ஏற்கனவே மத்திய அரசின் சார்பாக அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், இதற்கான தற்காலிக கட்டமைப்புகளை தமிழக அரசு ஒதுக்கீடு செய்து தர வேண்டும் எனவும், இந்த அறிக்கையின் அடிப்படையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தமிழக அரசு சார்பில் இது குறித்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தற்காலிக மாணவர் சேர்க்கை, வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை எப்போது தொடங்குவது என்பது குறித்து ஜூலை 16ம் தேதி ஆலோசனை நடைபெற உள்ளதாகவும், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின் நீதிபதிகள் தமிழக அரசின் செயல் வடிவம் குறித்து அடுத்த விசாரணையின்போது அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளனர்.

author avatar
Rebekal