#SRHvRCB: அவுட் ஆனபின் கேப்டன் கோலி செய்த காரியம்.. எச்சரித்த ஐபிஎல் நிர்வாகம்!

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் பெங்களூர் அணியின் கேப்டன் கோலி தனது விக்கெட்டை இழந்தபின் பெவிலியனுக்கு செல்லும்போது அங்குள்ள நாற்காலியை பேட்டால் குத்தி, தள்ளிவிட்டு உள்ளே சென்றார்.

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் பெங்களூர் – ஹைதராபாத் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 149 ரன்கள் எடுத்தனர். இதில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 59 ரன் எடுத்தார். 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி களமிறங்கியது.

தொடக்கத்தில் சற்று தடுமாறிய ஹைதராபாத் அணி, இறுதியாக டேவிட் வார்னரின் நிதானமான ஆட்டத்தால் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 143 ரன்கள் எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஹைதராபாத் அணி விளையாடிய இரண்டு போட்டியிலும் தோல்வியை தழுவியுள்ளது, குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஐபிஎல் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த போட்டியில் கேப்டன் கோலி, 33 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். அப்போது மைதானத்தை விட்டு பெவிலியன் திரும்போது வீரர்கள் அமர்வதற்காக போடப்பட்ட நாற்காலியை தனது பேட்டால் குத்தி, தள்ளிவிட்டு உள்ளே சென்றார். இந்த காட்சிகள், நேரடியாக ஒளிபரப்பப்பட்ட நிலையில், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் ஐபிஎல் நிர்வாகம், பெங்களூர் கேப்டன் கோலியின் இந்த செயலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.