ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் இலவச முகக்கவசங்கள் விநியோகிக்கப்படும்- அமைச்சர் காமராஜ்!

இலவச முகக்கவசங்கள், ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி முதல் விநியோகிக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.

அந்தவகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளில் மறுபயன்பாடு செய்யக்கூடிய இலவச முகக்கவசங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்த நிலையில், இந்த திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று காலை துவங்கி வைத்துள்ளார்.

அரசால் வழங்கப்படும் முகக்கவசங்கள் காதுகளில் மாட்டாமல், தலையின் பின்புறம் கட்டிக் கொள்வது போல் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த முகக்கவசத்தை துவைத்து மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்நிலையில், இந்த முகக்கவசங்கள் ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி முதல் விநியோகிக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

மேலும் இந்த முகக்கவசம் வழங்கும் டோக்கன்கள், ஆகஸ்ட் மாதம் 1, 3, 4 ஆகிய தேதிகளில் வீடு வீடுகளாக சென்று வழங்கப்படும் எனவும், டோக்கன்களை கொண்டுச்சென்று முகக்கவசங்களை பெற்றுக்கொள்ளலாம் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.