இலவச கல்வி, ரேஷன் மற்றும் மாதம் 5000 ஊக்க தொகை – பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மத்திய பிரதேச அரசு சலுகை!

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி, ரேஷன் மற்றும் மாதம் 5000 ஊக்க தொகை ஆகியவை வழங்கப்படும் என மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அவர்கள் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் நிலையில், ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்து  கொண்டும் இருக்கின்றனர். இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்திலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அங்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் 84 பேர் உயிரிழந்துள்ளனர். அம்மாநிலத்தில் உயிரிழப்புகள் தொடர்ந்து வரும் நிலையில் குழந்தைகள் பெற்றோரை இழந்தும், பெற்றோர்கள் குழந்தைகளை இழந்தும் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இது குறித்து பேசிய மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அவர்கள் கொரோனாவால் பெற்றோரை அல்லது பாதுகாவலரை இழந்த குழந்தைகளுக்கு இலவசக் கல்வியை ஏற்படுத்தித் தருவோம் எனவும், அந்த குழந்தைகளுக்கு இலவசமாக மாதம்தோறும் ரேஷன் மற்றும் 5,000 ரூபாய் உதவித் தொகையும் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் குழந்தைகளுக்கு மத்திய பிரதேச அரசு ஆதரவளிக்கும் எனவும், ஏனென்றால் அந்த குழந்தைகள் அரசின் குழந்தைகள், அவர்கள் கவலைப்பட தேவையில்லை. அரசு அவர்களை கவனித்துக் கொள்ளும் எனவும் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அவர்கள் தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal