பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ்க்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு.
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. ராஜேஷ் தாஸ்க்கு ரூ.10,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
பாலியல் வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்படும் முதல் ஐபிஎஸ் அதிகாரி ராஜேஷ் தாஸ். சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிந்து விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் 68 சாட்சியங்கள் விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பளித்து உத்தரவிட்டார் விழுப்புரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி. மேலும், இந்த வழக்கில் உடந்தையாக இருந்த செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி கண்ணனுக்கு ரூ.500 அபராதம் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2021ல் முதலமைச்சராக இருந்தபோது, அவரது ஆய்வு பணிக்காக பாதுகாப்புக்கு சென்ற சிறப்பு டிஜிபி முன்னாள் ராஜேஷ் தாஸ், பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் ராஜேஷ் தாஸ், முன்னாள் எஸ்பி கண்ணன் உள்ளிட்டோர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசராணை நடத்தி வந்த நிலையில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.