முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் விசாரணை நடத்த எந்த தடையும் இல்லை – உயர்நீதிமன்றம்..!

முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கு தொடர்பான ஆவணங்களை திரட்டி வருகிறோம் என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 2011 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் 2013 ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில்  வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது,லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, 2011 மே 23 முதல் 2013 ஏப்ரல் 20 வரையிலான காலத்தில் அமைச்சர் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தது தொடர்பான புகார்கள் மீது விசாரணை நடத்தப்பட்டது.

மேலும்,விசாரணை நடத்திய அதிகாரி கூறுகையில்,இது தொடர்பான புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை. இதனால் அவர் மீது லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கத் தேவையில்லை என்று தெரிவித்தார். இதனால் விசாரணையைத் தொடர வேண்டியதில்லை என்று கூறி, வழக்கை முடிக்கப் பொதுத்துறை உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து,அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆரம்பக் கட்ட விசாரணையில் போதிய முகாந்திரம் இல்லை, அரசு அனுமதிக்கப்பட்ட அளவுக்குள்ளாகவே அவரது வருமானம் உள்ளது எனக் கூறியதன் காரணமாக தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

அதன்பின்னர்,விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி நீதிபதிகள் எம்.சத்தியநராயணன் மற்றும் ஆர்.ஹேமலதா ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பளித்தனர்.முதலில் தீர்ப்பை வாசித்த நீதிபதி சத்தியநாராயணன், சொத்துக் குவிப்பு புகார் குறித்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிந்து விசாரிக்க வேண்டுமென உத்தரவிட்டார்.

பின்னர் தீர்ப்பை வாசித்த நீதிபதி ஹேமலதா,மகேந்திரன் வழக்கைத் தள்ளுபடி செய்வதாகத் தீர்ப்பளித்தார்.இரு நீதிபதிகளிடையேயான மாறுபட்ட தீர்ப்பால், மூன்றாவது நீதிபதியாக எம்.நிர்மல்குமார் நியமிக்கப்பட்டார். அவர் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்குத் தொடர்பான ஆவணங்களை அனைத்துத் தரப்பும் தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்கப்பட்டது.இதனால்,வழக்கின் மீதான இறுதி வாதங்களை ஆகஸ்ட் 5 ஆம் தேதி நேரடி விசாரணையாக கேட்பதாகக் கூறி வழக்கு விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார்.

இந்நிலையில்,இன்று மீண்டும் விசாராணைக்கு வந்த வழக்கில்,முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கு தொடர்பான ஆவணங்களை திரட்டி வருகிறோம் என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து,ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கில் காவல்துறை விசாரணை நடத்த எந்த தடையும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.