இத்தாலிய முன்னாள் கால்பந்து வீரர் பவுலோ ரோஸீ காலமானார்!

இத்தாலிய நாட்டை சேர்ந்த முன்னாள் கால்பந்து வீரரும், 1982 ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை போட்டியின் நாயகன் என போற்றப்படும் பவுலோ ரோஸீ, உடல்நலக்குறைவால் காலமானார்.

இத்தாலிய நாட்டின் புகழ்பெற்ற முன்னாள் கால்பந்து வீரரான பவுலோ ரோஸீ கடந்த 1982-ம் ஆண்டில் ஸ்பெய்ன் நாட்டில் நடந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அதிரடியாக ஆடி 6 கோல்களை அடித்து, அந்த போட்டியின் நாயகனாக ஜொலித்தார். அதனையடுத்து 2004 ஆம் ஆண்டில் பிரேசில் கால்பந்து வீரர் பீலே, உலகின் தலைசிறந்த 125 கால்பந்து வீரர்களில் இவரும் ஒருவர் என அவரை புகழ்ந்தார்.

தற்பொழுது 64 வயதாகும் அவர் நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், இன்று அவர் உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழந்த செய்தியை அவரின் மனைவி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார். அவரின் மறைவிற்கு உலகளவில் இருக்கும் அவரின் ரசிகர்கள் மட்டுமின்றி, கால்பந்து வீரர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.