முன்னாள் முதல்வர் “கருணாநிதியின் நிழல்” சண்முகநாதனின் இறுதி ஊர்வலம் தொடங்கியது!

சென்னை:முன்னாள் முதல்வர் “கருணாநிதியின் நிழலாக இருந்த அவரது உதவியாளரான சண்முகநாதன் அவர்களின் இறுதி ஊர்வலம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளரான கோ.சண்முகநாதன் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,நேற்று காலமானார். இவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

மறைந்த சண்முகநாதன் அவர்கள் மீது கொண்ட அதீத பாசத்தால்,நேற்று மாலை அவரது இல்லத்திற்கு சென்று நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில்,மீண்டும் இரண்டாவது முறையாக நேற்றிரவு அவரின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார்.

இந்த நிலையில்,முன்னாள் முதல்வர் “கருணாநிதியின் நிழல்” என்று அழைக்கப்பட்ட சண்முகநாதன் அவர்களின் இறுதி ஊர்வலம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.அதன்படி,டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக சென்று மயிலாப்பூர் டிஜிபி அலுவலகத்தின் பின்புறம் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

குறிப்பாக,அனைத்து அரசு சார்ந்த நிகழ்சிகளையும் ரத்து செய்து விட்டு மறைந்த சண்முகநாதன் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டுள்ளார்.

சண்முகநாதன் – யார் இவர்:

தமிழ்நாடு போலீசில் சுருக்கெழுத்து நிருபராக சண்முகநாதன் அவர்கள் தனது வாழ்க்கையை ஆரம்பித்தார்.அதன்படி,எதிர்க்கட்சித் தலைவர்கள் மேடையில் பேசுவதை குறிப்பெடுத்து அரசுக்கு அனுப்பவேண்டிய வேலையை செய்து வந்தார்.

இந்த நிலையில்,1967 ஆம் ஆண்டு முதல் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மறைவு வரை அவரின் நேர்முக உதவியாளராக சுமார் அரைநூற்றாண்டு காலம் பணியாற்றினார்.அந்த வகையில்,சட்டமன்றம், தலைமைச் செயலகம், சுற்றுப் பயணங்கள் மேற்கொள்ளும் கருணாநிதியுடன் அவரின் நிழலாகவே பின்தொடர்ந்தவர்தான் சண்முகநாதன்.இந்நிலையில்,அவரின் மறைவு திமுகவினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.