முன்னாள் ஆஸ்திரிலிய கிரிக்கெட் வீரர் துப்பாக்கி முனையில் கடத்தல்…நான்கு பேர் கைது!!

முன்னாள் ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் மேகில் கடத்தல் வழக்கு தொடர்பாக 4 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் கடந்த 14ம் தேதி 50 வயதான முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் மேகில் சிட்னியில் உள்ள தனது வீட்டிற்கு அருகே கடத்தப்பட்டு, நகரின் மற்றொரு பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு அவர் தாக்கப்பட்டு, துப்பாக்கியால் மிரட்டப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடத்தலை தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரம் கழித்து, ஸ்டூவர்ட் மேகில் பெல்மோர் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து ஏப்ரல் 20 ஆம் தேதி தான் வழக்கு பதிவாகியுள்ளது என போலீசார் தெரிவித்தனர். அவரது குடும்பத்தினரின் பாதுகாப்பிற்காக உடனடியாக போலீசுக்கு செல்லவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த கடத்தல் சம்பவம் கொள்ளை மற்றும் கடுமையான குற்றப்பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்வதாக கூறப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை 6 மணி முதல் கடத்தலில் சம்பந்தப்பட்ட 27, 29, 42, மற்றும் 46 வயதுடைய நான்கு பேரை காவல்துறை கைது செய்துள்ளது. அந்த 4 பேரை உள்ளூர் காவல்நிலைத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த கடத்தல் பணத்திற்காக நடந்திருக்கலாம், ஆனால், விடுவிக்கப்படுவதற்கு முன்னர் பணம் எதுவும் செலுத்தப்படவில்லை எனவும் காவல்துறை கூறியுள்ளது. ஸ்டூவர்ட் மேகில் துப்பாக்கியால் அச்சுறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு சிறிய காயங்கள் இருந்தன, அதற்கு மருத்துவ சிகிச்சை தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே, மேகில் ஒரு திறமையான லெக் ஸ்பின்னராக இருந்தார். 1998 லிருந்து 2008வரை ஆஸ்திரேலியாவுக்காக 44 டெஸ்ட் போட்டிகளில் 208 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2012ம் ஆண்டில் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதற்கு 19 ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவுக்காக மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்