#Breaking:ராஜேந்திர பாலாஜிக்கு ஜனவரி 20 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் – நீதிமன்றம் உத்தரவு!

விருதுநகர்:அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை ஜனவரி 20 ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றசாட்டு வைக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.அதன்பின்னர் , பணமோசடி செய்த புகாரில் முன்ஜாமீன் கோரியை மனுவை சென்னை உயர்நீதிமன்றம் டிசம்பர் 17-ஆம் தேதி தள்ளுபடி செய்ததால் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருந்தார்.

இதனால்,ராஜேந்திர பாலாஜியை பல்வேறு பகுதிகளில் தனிப்படை காவல்துறையினர் தேடி வந்தனர்.சுமார் 20 நாட்களாக 8 தனிப்படை காவல்துறையினர் தேடி வந்த நிலையில்,நேற்று மதியம் ராஜேந்திர பாலாஜி காவல்துறையிடம் சிக்கினார்.அதன்படி,காரில் சென்றுகொண்டிருந்த ராஜேந்திர பாலாஜியை தனிப்படை காவல்துறையினர் மடக்கி பிடித்ததாக கூறப்படுகிறது.

ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர இருந்த நிலையில்,கர்நாடகாவின் ஹசன் மாவட்டத்தில் வைத்து தமிழக காவல்துறையால் அவர் கைது செய்யப்பட்டார்.இதனையடுத்து,கைது செய்யப்பட்டுள்ள ராஜேந்திர பாலாஜியை தமிழகம் அழைத்து வந்து விசாரணை நடத்த திட்டமிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து,அவர் நள்ளிரவில் விருதுநகர் அழைத்து வரப்பட்டார். இதனைத் தொடர்ந்து,அவரிடம் 3 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது.

இதனையடுத்து,ராஜேந்திர பாலாஜி விருதுநகர் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பரம்பீர் அவர்கள் முன் இன்று ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது,கைது நடவடிக்கையை நிறுத்தினால் வெளியூர் செல்லாமல் விசாரணைக்கு ஒத்துழைக்கிறோம் என்று ராஜேந்திர பாலாஜி தரப்பு கேட்டுக்கொண்டது.

இந்நிலையில்,அதனை நிராகரித்து,ராஜேந்திர பாலாஜியை ஜனவரி 20 ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி பரம்பீர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.இதனைத் தொடர்ந்து,பலத்த பாதுகாப்புடன் அவரை மத்திய சிறையில் அடைப்பதற்கான ஏற்பாடு காவல்துறை தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து,பணமோசடி புகார் தொடர்பாக இன்னும் பலகட்ட விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் ராஜேந்திர பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க இன்னும் ஓரிரு நாட்களில் தமிழக காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.