ஹேக் செய்யப்பட்ட ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி அஷ்ரப் கனியின் ஃபேஸ்புக் பக்கம்..!

ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி அஷ்ரப் கனி,தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம் நேற்று முதல் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக,ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான ஆளும் அரசுக்கு எதிரான தொடர் தாக்குதலில் தாலிபான்கள் ஈடுபட்டு வந்தனர்.இதனையடுத்து,தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியது.

இதற்கிடையில்,ஆப்கானிஸ்தான் அதிபராக இருந்த அஷ்ரப் கனி ஆகஸ்ட் 15 அன்று காபூலை விட்டு வெளியேறினார்.பின்னர் கனி ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு தப்பிச் சென்றார்.மேலும்,லட்சக்கணக்கான ஆப்கன் மக்களும் தலிபான்களின் ஆட்சிக்கு அஞ்சி வெளியேறினர்.

இந்நிலையில்,தலிபானின் அங்கீகாரத்திற்கான அழைப்பு அவரது பக்கத்திலிருந்து செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.மேலும்,கனியின் கணக்கிலிருந்து வந்த ஃபேஸ்புக் பதிவு சர்வதேச சமூகமானது சன்னி பஷ்டூன் குழுவின் இயக்கத்திற்கு உதவவும், ஆப்கானிஸ்தான் சொத்துக்களை முடக்கவும் வலியுறுத்தியதாக  செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதனைத் தொடர்ந்து,ஆப்கானிஸ்தானின் முன்னாள் தலைவர் அஷ்ரப் கனி,தனது ஃபேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக கூறியுள்ளார். எனவே,தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வரும் பதிவுகளையோ பகிர்வுகளையோ மக்கள் நம்ப வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

“எனது முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அதை மீட்டெடுக்கும் வரை, நேற்றிலிருந்து ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட உள்ளடக்கம் இனி செல்லுபடியாகாது”,என்று தெரிவித்துள்ளார்.