தெலுங்கானாவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்..!

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதையடுத்து, தெலுங்கானாவில் இன்று முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது. இதுவரை கொரோனா வைரஸால் இந்தியாவில் ஒன்றரை கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரு லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் அம்மாநில அரசுகள், வைரஸ் தொற்றை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தெலுங்கானா மாநிலத்தில், கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், அம்மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3.61 லட்சம் ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 18 பேர் உயிரிழந்ததை அடுத்து, மொத்த கொரோனா தோற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,856 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 42 ஆயிரத்து 853 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதையடுத்து, தெலுங்கானாவில் இன்று முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 20 முதல் இந்த மாத இறுதி (ஏப்.30) வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ள நிலையில், இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இந்த ஊரடங்கு அமல் படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.