“லவ் ஜிஹாத்” க்கு எதிரான புதிய சட்டத்தின் கீழ் மத்திய பிரதேசத்தில் முதல் வழக்கு பதிவு

போபால்:மத்திய பிரதேசத்தில் காவல்துறையினர் மாநிலத்தின் புதிய ‘லவ் ஜிஹாத் எதிர்ப்பு’ சட்டத்தின் கீழ் முதல் வழக்கைத் பதிவு செய்துள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் உள்ள பார்வானி மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் அளித்த புகாரில் 25 வயது இளைஞர் ஒருவர் தன்னை திருமணம் செய்து கொண்டு தன்னுடைய மதத்திற்கு மாற வற்புறுத்தியதாகவும் அதற்கு தான் மறுத்ததால் உடல்ரீதியாக துன்புறுத்தியதாக புகார் கொடுத்துள்ளார்.

இந்த புகாரை பெற்றுக்கொண்ட பார்வானி காவல்துறையினர் மத்திய பிரதேச மத சுதந்திர கட்டளைச் சட்டத்தின் (2020) கீழ் கற்பழிப்பு மற்றும் மிரட்டல் விடுக்கப்பட்டதாக  வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த ‘லவ் ஜிஹாத் எதிர்ப்பு’ சட்டமானது கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடைமுறைக்கு வந்தது.இந்த சட்டத்தின் மூலம் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் 50,000 ரூபாய்  வரை அபராதமும் விதிக்கமுடியும்.

கடந்த மாதம் மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் “யாராவது மத மாற்றத்தைத் திட்டமிட்டால் அல்லது ‘லவ் ஜிஹாத்’ போன்ற ஏதாவது செய்தால், நீங்கள் அழிக்கப்படுவீர்கள்” என்று கூறியிருந்தார்.

பாஜக ஆளும் மற்றொரு மாநிலமான உத்தரபிரதேசத்தில்  அக்டோபரில் இதேபோன்ற ஒரு சட்டமான  “லவ் ஜிஹாத்” பற்றிய பரவலான விவாதங்களுக்கு இடையே நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.

author avatar
Castro Murugan