பட்டாசு விபத்து: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல்..!

கள்ளக்குறிச்சியில்  ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் செல்வகணபதி என்பவர் கடையின் மாடியில் தீபாவளி விற்பனைக்காக, சேகரித்து வைத்திருந்த பட்டாசுகள் நேற்று இரவு 7 மணி அளவில் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அருகில் இருந்த பேக்கரியில் 2 கேஸ் சிலிண்டர்கள் வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஊழியர்கள் மற்றும் கடை அருகே பூ விற்றுக் கொண்டிருந்தவர் உட்பட 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

காயமடைந்த 25 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், காவல்துறை கண்காணிப்பாளர்கள், டிஎஸ்பிக்கள் நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் தற்போது இந்த விபத்து குறித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, கள்ளக்குறிச்சி பட்டாசுக்கடை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் சீக்கிரம் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.