உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பெண்மணி ஒருவர் தனது திருமண நாளன்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அவர் மீது எப்ஐஆர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தங்களுடைய திருமண நாள் அன்று பலர் தங்களது திருமணத்தை வித்தியாசமான முறையில் கொண்டாட வேண்டும் என்பதற்காக விமானங்களில் திருமணம் நடத்துவது, கடலுக்கு நடுவில் திருமணம் நடத்துவது என பல முறைகளில் தங்கள் திருமணத்தை விசேஷப்படுத்திக் கொள்ள விரும்புகின்றனர். அதுபோல உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பெண்மணி ஒருவர் திருமண நாளன்று துப்பாக்கி சத்தத்தை ஒலிக்க செய்து கொண்டாடியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஜெத்வாரா பகுதியை சேர்ந்த பெண்மணி ரூபா பாண்டே அவரது மாமாவான ராம்வாஸ் பாண்டே என்பவரின் உரிமம் பெற்ற துப்பாக்கியை வைத்து தனது திருமண நாள் அன்று துப்பாக்கி சத்தத்தை ஒலிக்கச் செய்து திருமண நாளை கொண்டாடியுள்ளார். மேலும் அவர் துப்பாக்கியை வைத்து காற்றில் சுட்டதை வீடியோவாகவும் எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதையடுத்து இது தொடர்பாக அவர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.