நிவர் புயல் காரணமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்த விழுப்புரத்தை சேர்ந்த சரவணனுக்கு நிதி அறிவிப்பு!

நிவர் புயல் காரணமாக வரவேற்பு பந்தலில் காற்றடித்து, கம்பம் சரிந்ததால் மின்சாரம் தாக்கி உயிரிழந்த விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த தனபால் என்பவரின் மகன் சரவணனுக்கு முதல்வர் நிதி உதவியை அறிவித்துள்ளார்.

வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு நிவர் புயல் ஏற்பட்டது. இதனால் கடலோரப் பகுதியில் உள்ள மக்கள் எச்சரிக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தப்பட்டு இருந்தாலும் சில இடங்களில் எதிர்பாராத சூழ்நிலை மற்றும் இயற்கை சீற்றம் காரணமாக சிலர் உயிரிழந்தனர். இந்நிலையில் இது குறித்து தமிழக முதலமைச்சர் திரு எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிவர் புயல் காரணமாக கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து இருந்தாலும் எதிர்பாராத கனமழை காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டு அவர்களது குடும்பங்களுக்கு 4 லட்ச ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்தும், 6 லட்ச ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்தும் மொத்தமாக பத்து லட்ச ரூபாயாக 27.11.2020 அன்றே வழங்குவதற்கு தான் உத்தரவிட்டு இருப்பதாக கூறியுள்ளார்.

மேலும் தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செங்காவரம் கிராமத்தை சேர்ந்த தனபால் என்பவரின் மகன் சரவணன் அவர்கள் வரவேற்பு பந்தலில் காற்று அடித்ததன் காரணமாக கம்பம் சரிந்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்ததாகவும், மின்சாரம் தாக்கி உயிரிழந்த சரவணன் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார். மேலும் இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 4 லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 6 லட்ச ரூபாயும் ஆக மொத்தம் பத்து லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்க தாம் உத்தரவிட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal