நிறைவடைந்த வேட்புமனு தாக்கல்… ஆதி முதல் அந்தம் வரையில் ஈரோடு இடைத்தேர்தல் ஓர் அலசல்…!

காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மறைவுக்கு பின் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இன்று வேட்புமனு தாக்கல் நிறைவு வரையில் அங்கு நடந்த அரசியல் நகர்வுகளை இந்த கட்டுரையில் சுருக்கமாக பார்க்கலாம்…

எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவு:

thirumaganevr

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சராகவும், தமிழக காங்கிரஸ் தலைவராகவும் இருந்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். இவரது மகன் திருமகன் ஈவெரா. இவர் கடந்த 2021ல் திமுக கூட்டணியில் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதன்பின் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த ஜனவரி மாதம் 4ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். திருமகன் ஈவெராவின் திடீர் மரணம் காங்கிரஸ் தலைவர்கள், காங்கிரஸ் தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.

காலியான ஈரோடு கிழக்கு தொகுதி:

electionerode

திருமகன் ஈவெரா மறைவை தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானது. இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிரிபார்க்கப்பட்டது. அதன்படி, அடுத்த 6 மாதத்துக்குள் சட்டசபை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இடைத்தேர்தல் அறிவிப்பு:

ecindia

இந்த சமயத்தில் உடனடியாக ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம். அதன்படி பிப்ரவரி மாதம் 27ம் தேதி ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் 31ம் தேதி தொடங்கி இன்றுடன் முடிவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வேட்புமனு தாக்கல்:

nominationfile

இதன் தொடர்ச்சியாக கடந்த 31-ஆம் தேதி இடைத்தேர்தலுக்கான வேட்மனு தாக்கல் தொடங்கியது. இதில்,  கடந்த 3-ம் தேதி திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அமமுக வேட்பாளர் சிவ பிரசாந்த் உட்பட 16 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். 

கடந்த 4-ம் தேதி 10 சுயேச்சை வேட்பாளர்களும், நேற்று (பிப்.6) நாம் தமிழர் கட்சியின் மாற்று வேட்பாளர் உட்பட 13 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இன்று இபிஎஸ் தரப்பு அதிமுக வேட்பாளர் தென்னரசு வேட்புமனு தாக்கல் செய்தார். இதுவரை மொத்தம் 60 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இடைத்தேர்தலில் திமுக:

இடைத்தேர்தல் தேதி அறிவித்தவுடன் திமுக சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்று ஆலோசிக்கப்பட்டது. இடைத்தேர்தல் என்பதால் திமுகவே நேரடியாக களம் காணுமா? அல்லது காங்கிரஸ் கட்சி சார்பாக வேட்பாளர் நிறுத்தப்படுவார்களா? என்று ஆலோசித்த நிலையில், காங்கிரஸ் கட்சி முதலில் களம் இறங்கி எங்கள் தரப்பு வேட்பாளர் நிற்பார் என்றும் அதற்கு ஆதரவை கேட்டு, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மூத்த தலைவர்கள் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

வேட்பாளர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன்:

அதற்கு பிறகு மறைந்த முன்னாள் எம்எல்ஏ திருமகன் ஈவேராவின் தந்தையும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காங்கிரஸ் திமுக கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதற்குப் பிறகு கடந்த வரம், காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் பிப்ரவரி 3ஆம் தேதி வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதற்கு முன்னரே காங்கிரஸ் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் தங்களது பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டனர். திமுகவின் முக்கிய அமைச்சர்கள் அந்த பிரச்சாரத்தில் முக்கிய பங்கு வகித்து தீவிரமாக செல்லப்பட்டு வருகின்றனர்.

இபிஎஸ் – ஓபிஎஸ் – பாஜக:

திமுக தரப்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்புமனு தாக்கல் செய்யும் தேதி அறிவித்து வேட்பு மனு தாக்கல் செய்யும் வரையிலும் எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக தங்கள் தரப்பு வேட்பாளர்களை அறிவிக்காமலே இருந்து வந்தது. மேலும், அதிமுகவானது எடப்பாடி பழனிச்சாமி தரப்பு – ஓ.பன்னீர்செல்வம் தரப்பு என தனித்தனியே பிரிந்து இருந்தது. இதில் கூட்டணி கட்சியாக இருக்கும் பாரதிய ஜனதா கட்சியும் தங்களது நிலைப்பாட்டையும் உறுதியாக தெரிவிக்காமல் அவர்களும் தங்கள் நிர்வாகிகளுடன் ஆலோசித்து வந்தனர்.

பாஜகவின் ஆதரவு:

இதனை அடுத்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தங்கள் வேட்பாளராக ஈரோடு கிழக்கு தொகுதி முன்னாள் எம்எல்ஏ தென்னரசுவை அறிவித்தார்கள். அதே வேளையில் ஓ.பன்னீர்செல்வம் தங்கள் தரப்பு வேட்பாளராக செந்தில் முருகன் என்பவரை அறிவித்தார்கள். கூட்டணி கட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சி இருதரப்பு தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதே போல தங்களுக்கு ஆதரவு கொடுக்குமாறு இபிஎஸ் – ஓபிஎஸ் என இரு தரப்பினரும் தனித்தனியே பாஜக அலுவலகத்திற்கு சென்றனர்.

உச்சநீதிமன்றத்தில் இரட்டை இலை:

இதற்கிடையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் அதிமுக சார்பாக போட்டியிட அனுமதிக்க கோரி வழக்கில் குறிப்பிட்டு இருந்தனர். இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு, கட்சி விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. எனவும், பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஆதரவு கடிதம் வாங்கி ஒரு வேட்பாளரை அதிமுக வேட்பாளராக தேர்வு செய்து அதனை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

அனுமதி கடிதம்:

அதற்குப் பிறகு அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களிடம் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு விறுவிறுவென தங்கள் படிவங்களை அனுப்பி, கையெழுத்து வாங்கி, டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்தனர்.

அதிமுக வேட்பாளர் தென்னரசு:

இதற்கிடையில் தங்களிடம் முறையாக உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி நடந்து கொள்ளவில்லை. தங்களிடம் முறையாக அனுமதி கேட்கவில்லை. பொதுக்குழு கூட்டம் நடத்தவில்லை என ஓபிஎஸ் தரப்பு குற்றம்சாட்டி வந்தாலும், இறுதியில் இரட்டை இலைக்கு எங்கள் ஆதரவு என்று பொதுவாக விளக்கத்தை கூறி, தங்கள் தரப்பு வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருந்த செந்தில் முருகன் இடைத்தேர்தல் களத்தில் இருந்து திரும்ப பெறப்படுகிறார் என்றும் அறிவித்து விட்டனர்.

பாஜக அறிக்கை:

தற்போது, அதிமுக வேட்பாளராக இரட்டை இலை சின்னத்தில் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த தென்னரசு போட்டியிட உள்ளார். அதற்காக இன்று அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். அதேபோல இன்று தமிழக பாரதிய ஜனதா கட்சி தங்கள் முழு ஆதரவை அறிக்கை மூலம் வெளியிட்டு உள்ளது.

அதில், தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் தென்னரசுவுக்கு முழு ஆதரவு. இதற்கு ஒத்துழைத்த இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும் நன்றி என்றும் அந்த அறிக்கையில் பாஜக குறிப்பிட்டுள்ளது.

வேட்புமனு தாக்கல் நிறைவு:

 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 31-ஆம் தேதி விறுவிறுப்பாக நடைபெற்று, தற்போது இன்று மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment