வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணிக்கு ஆட்டோவிலேயே பிரசவம் பார்த்த பெண் காவலர்கள்..!

வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணிக்கு ஆட்டோவிலேயே பிரசவம் பார்த்த பெண் காவலர்கள்..!

மத்திய பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி சென்று கொண்டிருந்த ஆட்டோவிலேயே பிரசவம் பார்க்க இரண்டு பெண் காவலர்கள் உதவியுள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அம்மாநிலத்தில் உள்ள போபாலை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணிற்கு பிரசவ வலி எடுத்த காரணத்தால் ஆட்டோ மூலமாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது ஆட்டோ வெள்ளத்தில் சிக்கியதால் அதன் பின்னர் நகரமுடியாமல் தத்தளித்து கொண்டிருந்துள்ளது.

அப்பகுதியில் இந்த சம்பவத்தை பார்த்து கொண்டிருந்த இரண்டு பெண் காவலர்கள் ஆட்டோவை தற்போது நகர்த்தி மருத்துவமனைக்கு அனுப்புவது கடினம் என்பதை புரிந்துகொண்டனர். அதனால் காவல்துறை துணை ஆய்வாளர் அருந்ததி ரஜாவத் மற்றும் தலைமை காவலர் இதிஸ்ரீ ரத்தோர் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் இருந்து செவிலியரை உடனடியாக சம்பவ இடத்திற்கு வருமாறு அழைத்துள்ளனர்.

இதனை அடுத்து நிறைமாத கர்ப்பிணிக்கு ஆட்டோவிலேயே பிரசவம் நடப்பதற்கு இரண்டு பெண் காவலர்களும் செவிலியருக்கு உறுதுணையாக இருந்துள்ளனர். 3 சக்கர வாகனத்தில் நடந்த இந்த பிரசவத்தில் அப்பெண்ணிற்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதனை அடுத்து தாயும் சேயும் அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கிய நிறைமாத கர்ப்பிணிக்கு உதவிய பெண் காவலர்களுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Join our channel google news Youtube