குழந்தையை திருடி 16 லட்சத்துக்கு விற்பனை செய்த பெண் மருத்துவர் கைது!

பெங்களூரில் குழந்தையை திருடி 16 லட்சத்துக்கு விற்பனை செய்த பெண் மனநல மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டாக்டர் ரஷ்மி சசிகுமார் என்பவர் பன்னேர்கட்டா சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மனநல மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பதாக அனுபமா எனும் பெண்மணிக்கும் 16 லட்சத்திற்கு குழந்தை ஒன்றை விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. அனுபமா என்பவருக்கும் அவரது கணவருக்கும் ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது. ஆனால் அவருக்கு உடலில் சில பிரச்சனைகள் இருப்பதால் மேலும் ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத சூழல் உருவாகி உள்ளது.

எனவே அனுபமாவிடம் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என டாக்டர் ரஷ்மி பரிந்துரைத்தாகவும், இதற்காக 16 லட்சம் அந்த பெண்மணியிடம் மருத்துவர் பெற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அவரால் வாடகைத்தாய் ஏற்பாடு செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளது. எனவே டாக்டர் ரஷ்மி தெற்கு பெங்களூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு சென்று அங்கு ஆலோசனை மருத்துவர் போல நடந்து கொண்டு ஒரு ஆண் குழந்தையைப் பிரசவித்த அன்றே திருடிக் கொண்டு வெளியில் வந்துள்ளார்.

பின் அந்த குழந்தையை அனுபமாவிடம் ஒப்படைத்துவிட்டு பிரசவத்தின் போது இந்த குழந்தை தாயை இழந்து விட்டது என கூறியுள்ளார். இந்நிலையில், இது குறித்து இந்த மருத்துவர் மீது புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில் காவல்துறையினர் மருத்துவரை ஒரு வருடமாக தேடி வந்த நிலையில், தற்பொழுது பெலகாவியில் வைத்து பெண் மனநல மருத்துவர் ரஷ்மி கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து அவரிடம் கேட்டபோது தன்னுடைய கடன்களை திருப்பிச் செலுத்துவதற்காக தான் இந்த குற்றத்தை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.

author avatar
Rebekal