ராகுல் காந்தியை பற்றிய பயம் பாஜகவை தூங்கவிடாமல் துரத்துகிறது – ஜோதிமணி

ராகுல் காந்தியை பற்றிய பயம் பாஜகவை தூங்கவிடாமல் துரத்துகிறது – ஜோதிமணி

ராகுல் காந்தியை பற்றிய பயம் பாஜகவை தூங்கவிடாமல் துரத்துகிறது என ஜோதிமணி ட்வீட்.

இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ என்ற நிறுவனத்தின் PEGASUS சாப்ட்வேர் மூலம் பல்வேறு நாடுகளில் முக்கிய நபர்களின் செல்போன் உரையாடல்கள், படங்கள், வீடியோக்கள் கண்காணிக்கப்பட்டதாக குற்றசாட்டுகள் எழுந்தது. இந்நிலையில், இதுகுறித்து, பிரான்ஸை சேர்ந்த Forbidden Stories என்ற ஊடக நிறுவனத்துடன் இந்தியாவைச் சேர்ந்த THE WIRE மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த வாஷிங்டன் போஸ்ட், தி கார்டியன் உள்ளிட்ட 17 ஊடக நிறுவனங்கள், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆகியவை இணைந்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவை சேர்ந்த அரசியல் தலைவர்கள், நீதிபதிகள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் ஆகியோரின் தொலைபேசி எண்களும் உளவு பார்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில், அலைபேசி எண்களின் பட்டியலில் ராகுல் காந்தி முன்பு பயன்படுத்திய இரண்டு எண்களும் இருந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில், இதுதொடர்பாக கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ராகுல்காந்தி, அவரது உதவியாளர்கள், நண்பர்கள் எல்லோருடைய அலைபேசியையும் மோடிஅரசு தொடர்ந்து ஒட்டுக்கேட்டுக்கொண்டிருக்கிறது. ஆனாலும் ஒன்றும் கிடைக்கவில்லை. எமது தலைவரிடம் மறைப்பதற்கு எதுவுமில்லை.ஆனால் அவரைப் பற்றிய பயம் பாஜகவை தூங்கவிடாமல் துரத்துகிறது என்பது மட்டும் நிச்சயம்.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube