“தந்தை பெரியாரின் 143 வது பிறந்தநாள்:அன்பால் நிறைந்த உலகு”- கேரள முதல்வர் பினராயி விஜயன்..!

தந்தை பெரியாரின் பிறந்த நாளில் அவருக்கு வணக்கம் செலுத்துவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இன்று தந்தை பெரியாரின் 143 வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் திருவுருவப் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தியிருந்தார்.அதன்பின்பு முதல்வர் ஏற்கனவே அறிவித்தபடி தந்தை பெரியாரின் பிறந்த நாளான இன்று சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.

அதன்படி,இன்று அரசியல் பிரபலங்கள் மற்றும் மக்கள் பலரும் பெரியாரின் பிறந்த நாளை சமூக நீதி நாளாக அனுசரித்து பெரியாரின் படங்களுக்கு மலர்தூவி வருகின்றனர். இந்நிலையில்,பெரியாரின் பிறந்த நாளில் அன்பால் நிறைந்த உலகை உருவாக்க உறுதி கொள்ள வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

“பெரியாரின் பிறந்த நாளில் அவருக்கு வணக்கத்தை உரித்தாக்குகிறோம். சமூக நீதி,சாதி ஒழிப்பு மற்றும் மத நல்லிணக்கம் ஆகியவற்றுக்கான போராட்டங்கள் அதிகமாக தேவைப்படும் இக்காலகட்டத்தில் அவர் வழியில் நாமும் அன்பால் நிறைந்த உலகை உருவாக்க உறுதி கொள்வோம்”,என்று பதிவிட்டுள்ளார்.