கருப்புச் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தும் போராட்டம்! திமுக ஆதரவு!

கருப்புச் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தும் போராட்டம்.

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில், கருப்பு சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்ற்னர். இவர்களது போராட்டத்திற்கு திமுக முழு ஆதரவு அளித்துள்ள நிலையில், இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

முகநூல் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘

உலகப் பேரிடரான கொரோனா கால ஊரடங்கில் மக்கள் நலனைக் காப்பதற்குப் பதில், மக்களின் நலன்களுக்கு எதிராகவும் – மாநில உரிமைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு.
குறிப்பாக, நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயிகளின் வாழ்வுரிமையைப் பறிக்கும் வகையில் 4 சட்டங்களை நடைமுறைப்படுத்திட பா.ஜ.க. அரசு தீவிரமாகச் செயல்படுகிறது.
மின்சார சட்டத் திருத்த மசோதா 2020, அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020, வேளாண் உற்பத்திப் பொருட்கள் வணிக ஊக்குவிப்புச் சட்டம் 2020, விவசாயிகளுக்கு விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்தப் பாதுகாப்பு அவசரச் சட்டம் 2020; இந்த 4 சட்டங்களும் பெயரளவில் நன்மை செய்வது போலத் தெரிந்தாலும், உள்ளுக்குள் இருக்கும் அம்சங்கள், வேளாண்மைக்கு வேட்டு வைத்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் தன்மை கொண்டவை என்பதை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு, பொதுமக்களையும் பாதிக்கும் இந்தக் கறுப்புச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, மத்திய அரசுக்கு எதிரான போராட்டக் களத்தைக் கட்டி அமைத்துள்ளது.
அவசரச் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெறும் வகையில் தமிழக மக்களிடம் ஒரு கோடி கையெழுத்து வாங்கும் இயக்கத்தை நடத்துவதுடன், ஜூலை 27 அன்று அனைத்து வீடுகளிலும் கறுப்புக் கொடி ஏற்றி எதிர்ப்புத் தெரிவித்திடவும் கோரிக்கை விடுத்துள்ளது.
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இந்தக் கையெழுத்து இயக்கம் மற்றும் கறுப்புக் கொடிப் போராட்டத்திற்குத் திராவிட முன்னேற்றக் கழகம், தனது முழு ஆதரவினை வழங்குகிறது.
கறுப்புச் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டு, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரின் நலனும் பாதுகாக்கப்படுவதற்கு தி.மு.க. துணை நிற்கும்.’ என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

https://www.facebook.com/arivalayam/posts/3371498759547585

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.