தலிபான்களின் ஆட்சியை அங்கீகரிக்காவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் – தலிபான்கள் எச்சரிக்கை!

தலிபான்களின் ஆட்சியை உலக நாடுகள் அங்கீகரிக்காவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் என தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி முதல் தலிபான்கள் நாட்டை கைப்பற்றிய நிலையில், அந்நாட்டில் உள்ள பிற நாட்டு மக்கள் மற்றும் அந்த நாட்டை சேர்ந்த பலர் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி உள்ளனர். இந்நிலையில் தொடர்ச்சியாக அந்நாட்டில் பெண்களுக்கு எதிரான சட்டங்கள் மறுக்கப்பட்டு வரும் நிலையில், பல்வேறு உலக நாடுகளும் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட தலிபான்கள் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

மேலும், ஆப்கானிஸ்தானுக்கு வழங்கி வந்த நிதி உதவியை அமெரிக்கா நிறுத்தியுள்ள நிலையில், கடன் உதவியை சர்வதேச நிதியம் நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தலிபான் செய்தி தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித் அவர்கள், ஆப்கானிஸ்தான் அங்கீகரிக்கப்படாத நிலை தொடர்ந்தால் அது பிராந்தியத்தில் அமைதியற்ற நிலையை ஏற்படுத்துவதுடன் உலகின் பெரும் பிரச்சனையாகவும் மாறும் எனக் கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்காவும், ஆப்கானிஸ்தானும் போருக்கு சென்றதற்கு காரணம் இருவருக்கும் முறையான ராஜதந்திர உறவுகள் இல்லாதது தான் எனவும் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளுடனும் தூதரக உறவுகளை புதுப்பிக்க தாங்கள் விரும்புவதாகவும்,  அப்பொழுது தான் முறையான மற்றும் நல்ல உறவுகளை பராமரிக்க முடியும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா, பாகிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தானில் குண்டு வீசி தாக்குதல் நடத்துவது சாத்தியம் அல்ல. ஆப்கானிஸ்தான் வான்வெளியை அமெரிக்கா பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஆப்கானிஸ்தானில் ஆட்சி நடத்தக்கூடிய தலிபான்களை உலக நாடுகள் அங்கீகரிக்காவிட்டால் பெரும் விளைவுகளும் அசம்பாவிதங்களும் ஏற்படும். அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க மாட்டோம்  எனவும் அவர் கூறியுள்ளார்.

author avatar
Rebekal