தமிழகத்தில் பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மே 23ம் தேதி வரை நீட்டிப்பு.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெற்று தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியானது. இந்த தேர்வினை 8.17 லட்சம் மாணவ, மாணவியர்கள் எழுதினர். இந்த பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி தோல்வியடைந்த மாணவர்களுக்கு வரும் ஜூன் 19-ஆம் தேதி துணைத்தேர்வு நடைபெறவுள்ளது.
மேலும், தேர்வில் தேர்ச்சி பெறாத 47,934 பேர் விண்ணப்பித்து துணைத்தேர்வில் கலந்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் துறை இயக்குனர் சேதுராம வர்மா அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இதனையடுத்து, பிளஸ் 2 மாணவர்களுக்கான துணைத்தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மே 20 வரை உள்ளது என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளை மே 23ம் தேதி வரை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், துணைத் தேர்வு எழுதிய மாணவ, மாணவியர்களுக்கு ஜூலை மாதமே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.