பொதுக்குழுவில் எங்கு பார்த்தாலும் அடியாட்கள் மயமாக இருந்தது – மருது அழகுராஜ்
பொதுக்குழுவில் எங்கு பார்த்தாலும் அடியாட்கள் மயமாக இருந்தது – மருது அழகுராஜ்
திட்டமிட்டு திரைக்கதை எழுதியது போல அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் அவமதிக்கப்பட்டார் என அதிமுக முன்னாள் செய்தித் தொடர்பாளர் மருது அழகுராஜ் பேட்டி.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த சர்ச்சை எழுந்துள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில்,அதிமுக பொதுக்குழு கூட்டம் பரபரப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில்,அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அக்கூட்டத்தில்,ஒற்றைத் தலைமை தீர்மானம் குறித்து முடிவு எடுக்கப்படவுள்ளது.
அதிமுக முன்னாள் செய்தித் தொடர்பாளர் மருது அழகுராஜ் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், இரட்டை தலைமை மக்களால் ஏற்கப்பட்டது; யாருடைய சுயநலம் அதிமுகவின் பிளவுக்கு காரணம் என்பது அனைவருக்கு தெரியும்.
வழக்கமாக நடக்கும்படி இந்த பொதுக்குழு கூட்டம் நடைபெறவில்லை; பொதுக்குழுவில் எங்கு பார்த்தாலும் அடியாட்கள் மயமாக இருந்தது. திட்டமிட்டு திரைக்கதை எழுதியது போல அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் அவமதிக்கப்பட்டார்; ஆனால், அண்ணன் எடப்பாடி பழனிசாமி அதனை கண்டிக்கவில்லை, வருத்தம் தெரிவிக்கவில்லை. அதிமுகவை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டுமென திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டது இந்த பொதுக்குழு; ஜனநாயகத்திற்கு மாறாக, ஒரு நில அபகரிப்பு நடப்பது போல அதிமுகவில் அரசியல் அபகரிப்பு நடக்கிறது என தெரிவித்துள்ளார்.