INDvENG: 6 விக்கெட்களை வீழ்த்திய அக்சர் படேல்.. 112 ரன்களுக்கு சுருண்ட இங்கிலாந்து!

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாம் டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணியின் பந்துவீச்சை தாங்காமல் இங்கிலாந்து அணி, 112 ரன்களுக்கு சுருண்டது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாம் டெஸ்ட் போட்டி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று மதியம் 2:30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக சாக் க்ராலி – டொமினிக் சிப்லி களமிறங்கினார்கள்.

தொடக்கம் முதலே சற்று தடுமாறிய இங்கிலாந்து அணி, இரண்டாம் ஓவரில் ஒரு ரன் கூட எடுக்காமல் டொமினிக் சிப்லி வெளியேறினார். அவரையடுத்து களமிறங்கிய அதிரடி வீரர் ஜானி பைர்ஸ்டோவும் ஒரு ரன் கூட எடுக்காமல் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய ஜோ ரூட் 17 ரன்களில் வெளியேற, தொடக்கத்தில் களமிறங்கிய சாக் க்ராலி அரைசதம் அடித்தார். 53 ரன்களில் சாக் க்ராலி தனது விக்கெட்டை இழக்க, அவரைதொடர்ந்து களமிறங்கிய அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள்.

இறுதியாக இங்கிலாந்து அணி, 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 112 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனைதொடர்ந்து இந்திய அணி, பேட்டிங் செய்ய களமிறங்கவுள்ளது. பந்துவீச்சை பொறுத்தளவில் அக்சர் படேல், தலா 6 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். அதனைதொடர்ந்து அஸ்வின், 3 விக்கெட்களை வீழ்த்தினார்.