“தமிழ் வழியில் இன்ஜினியரிங் படிப்புகள்;நாளைக்குள் செமஸ்டர் ரிசல்ட்” – அமைச்சர் பொன்முடி அறிவிப்பு..!

அண்ணா பல்கலைக்கழகம் செமஸ்டர் தேர்வு முடிவு நாளைக்குள் வெளியிடப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை  மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்,அண்ணா பல்கலைக்கழகம் செமஸ்டர் தேர்வு முடிவு நாளைக்குள் வெளியிடப்படும் என்றும்,சிவில், மெக்கானிக்கல் உள்ளிட்ட பொறியியல் படிப்புகள் தமிழ் வழியில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அமைச்சர் கூறியதாவது:

“விருதுநகர்,தாராபுரம், ஆலங்குடி, கூத்தாநல்லூர், சேர்க்காடு,திருச்சுழி, கள்ளக்குறிச்சி,திருக்கோயிலூர், தர்மபுரி ஏரியூர், ஒட்டன்சத்திரம்,  தாளவாடி, மானூர் ஆகிய இடங்களில் புதிதாக 10 அரசு, கலைக் கல்லூரிகள் தொடங்கப்படும்.

மேலும்,செங்கல்பட்டு, சேலம், திண்டுக்கல், கும்பகோணம், நந்தனம், கோவை, நாமக்கல், திருச்சி, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் உள்ள அரசு கலை கல்லூரிகளில் ஆராய்ச்சி பாடப் பிரிவு தொடங்கப்படும். அதுமட்டுமல்லாமல்,வெவ்வேறு பிரிவுகளில் 100 பாடப்புத்தகங்கள் ரூபாய் 2 கோடி மதிப்பில் தமிழில் மொழிபெயர்க்கப்படும்”, என்றும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து,மெக்கானிக்கல்,சிவில் உள்ளிட்ட பொறியியல் படிப்புகள் தமிழ் வழியில் அறிமுகப்படுத்தப்படும்.பி.காம் பட்டப் படிப்பில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கு வழிவகை செய்யப்படும். திருவண்ணாமலை, மயிலாடுதுறை, சேலம், சிவகங்கையில் திறந்தநிலை பல்கலைக் கழகங்களுக்கு புதிய மண்டல மையங்கள் அமைக்கப்படும்” என்று கூறினார்.

மேலும்,”அண்ணாமலை பல்கலை செமஸ்டர் தேர்வு முடிவுகள் நாளைக்குள் வெளியிடப்படும்”, என்று தெரிவித்துள்ளார்.